தமிழில் விஜய், தனுஷ், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர், கடந்த 2022ஆம் ஆண்டு தனது நண்பரும் தொழிலதிபருமான சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு கோட்டையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேலும் இவர்களுடைய திருமண வீடியோ, ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ‘லவ் ஷாதி டிராமா’ என்ற பெயரில் ஆவணப்படமாக ஒளிபரப்பானது. இது ஆறு அத்தியாயங்கள் கொண்டது. குறிப்பாக, இவர்களுடைய காதல் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின்கீழ் ஒரு கனவு திருமண முன்மொழிவைக் காண்பிப்பதில் இருந்து அவர்களின் ஆடம்பரமான திருமண கொண்டாட்டங்கள் வரை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருந்தது.

ஆனால் திருமணமாகி 4 ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக  பரஸ்பர சம்மதத்தின்பேரில் பிரிந்து கடந்த மார்ச் 11ம் தேதி விவாகரத்து பெற்றுக்கொண்டனர். விவாகரத்துக்கு பிறகு கோவில் கோவிலாக சுற்றி வரும் ஹன்சிகா, வட இந்தியா தாண்டி விரைவில் தென் இந்திய பகுதிகளிலும் உள்ள கோவில்களுக்கு வருகை தரவிருக்கிறார்.

இதற்கிடையில் சமீபத்தில் ஹன்சிகா ரசிகர்களுடனான ஒரு கலந்துரையாடலில், “இப்போது மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும் இருக்கிறேன். தனிமை எனக்கு எப்போதுமே பிடிக்கும். இப்போது அந்த தனிமை மகிழ்ச்சி கலந்து இருக்கிறது. எனக்கானவர்களுக்கு நேரம் செலவிடுவதும், எனக்கு பிடித்தமானவற்றை செய்வதும் என்னை சந்தோஷமாக வைத்திருக்கிறது”, என்றார்.

மேலும் விவாகரத்து விஷயத்தில் தனது குடும்பத்தினர் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என அவர் கூறியுள்ளார். தனக்கு எந்த வருத்தமும் இல்லை எனவும் தவறான ரயிலில் ஏறி கஷ்டப்படுவதைவிட, இறங்கி விடுவது நல்லது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version