தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதான மென்பொறியாளர் கவின் செல்வகணேஷின் ஆணவக் கொலை வழக்கு, தமிழகத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தின. கவினும் தனியார் மருத்துவமனையில் சித்தா மருத்துவராக பணிபுரியும் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமுக்கத்தை சேர்ந்தவர். இதனால் பெண்ணின் குடும்பத்தின் சார்பில் கவினுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து சமசரம் பேசலாம் என்று அழைத்த பெண் குடும்பத்தினர், கவினை கடந்த ஜூலை 27 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் கேடிசி நகரில் வைத்து கடுமையாக தாக்கி கொலை செய்தனர். இந்த கொடூர சம்பவம், சாதி ஆணவத்தின் கொடிய முகத்தை வெளிக்கொண்டு வந்தது.

இதையடுத்து பெண்ணின் சகோதரர் சுர்ஜித் கைது செய்யப்பட்டு, அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. இதனை தொடர்ந்து கொலை செய்த சுர்ஜித்தின் தந்தை, காவல் துறையில் சார்பு ஆய்வாளராக இருந்த சரவணனும் இந்த வழக்கில் தொடர்பு உடையவர் என விசாரணையில் தெரிய வந்தது. அவர் குற்றவாளிக்கு ஆதரவாக நடந்து கொண்டதாகவும், சம்பவத்தை மறைக்க முயற்சி செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் சரவணனும் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த ஆணவக் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, அதிகாரிகள் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது சுர்ஜித்தின் உறவினரான ஜெயபாலன் என்பவர், இந்த கொலையில் முக்கிய பங்காற்றியதாக தகவல் கிடைத்தது. சுர்ஜித் பயன்படுத்திய அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் ரத்தக்கறை படிந்த உடைகள், ஜெயபாலனின் வீட்டில் மறைக்கப்பட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொலைக்கு ஜெயபாலன் உடந்தையாக இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனால் ஜெயபாலனும் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி புதுக்கோட்டை பொன் காந்திமதிநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், விசாரணைய மாவட்ட நீதிபதி கண்காணிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட கவின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் ஆணவ கொலையை தடுக்க சிறப்பு சட்டம் கொண்டுவரவேண்டும் என தலைமை செயலர், உள்துறை செயலருக்கு மனு அனுப்பினேன், நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 2025 ஆகஸ்ட்டில் இரு நீதிபதிகள் அமர்வு, சிபிசிஐடி இறுதி அறிக்கையை 2 மாதங்களில் சம்பந்தபட்ட கீழமை நீதிமன்றத்திற்கு அனுப்பவேண்டும் என உத்தரவிட்டது. இருப்பினும், இது தொடர்பான மனுவை நேற்று நீதிபதிகள் சுரேஷ்குமார், வடமலை அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் செந்தில்வேல் ஆஜரானார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான், போலீசார் விசாரணையை முடித்து மாவட்ட கீழமை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கவினின் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஆணவ படுகொலையை தடுக்க சட்டம் இயற்றும் விவகாரம் அரசின் பரிசீலனையில் உள்ளது என்றார்.

இதனை பதிவு செய்த நீதிபதிகள், ஆணவ கொலையை தடுக்க தனி சட்டம் இயற்றவேண்டும் என்று அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிடமுடியாது; இவ்விவகாரத்தை மேலும் விசாரிப்பதற்கு எதுவும் இல்லை. வழக்கு பைசல் செய்யப்படுகிறது என்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version