தமுஎகசவுடன் கடந்த 40ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல உறவோடு இருந்தவர் பாரதிராஜா என அவ்வமைப்பின் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச் செயலாளர் களப்பிரன் ஆகியோர் செலுத்தியுள்ளனர்.
இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
50ஆண்டுகளுக்கு முன்பு தனது திரை மொழியால் தமிழ்த் திரையுலகிற்கு புதிய வழித்தடம் அமைத்துக் கொடுத்தவர், படப்பிடிப்பு அரங்கிற்குள் சுருங்கிக்கிடந்த தமிழ்த் திரைப்படங்களை, வெட்ட வெளிகளுக்குள்ளும், பொட்டல் காட்டிற்குள்ளும் பரவவிட்டவர், சினிமாவை கிராமங்களுக்கு கொண்டு செல்லவே படாதபாடுபட்ட காலத்தில், அசல் கிராமத்து மனிதர்களையே சினிமாவிற்குள் அழைத்து வந்தவர் என்று தமிழ்ச் சினிமாவின் முகமாக இருந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் என்பது தமிழ்த்திரையுலகிற்குப் பெரும் இழப்பாகும். அவருக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது.
இளம் வயது முதலே இடதுசாரி இயக்கங்களோடும், முற்போக்கு ஜனநாயக அமைப்புகளோடும் தன்னை அடையாளப்படுத்தி வந்த பாரதிராஜா அவர்கள், 38 திரைப்படங்களை இயக்கியுள்ளார். 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நுட்பமான நடிப்புத்திறனை வெளிப்படுத்தியுள்ளார். தனது திரைப்படங்களில் அசல் கிராத்து மனிதர்களை, ஒப்பனை ஏதும் இல்லாமல் உணர்வுப்பூர்வமாக காட்சிப் படுத்துவதோடு, சமூகத்தில் நிலவும் மூடப்பழக்கவழக்கங்களை, கூர் தீட்டப்பட்டிருந்த சாதிய வேறுபாடுகளை, அதன் வன்மம் மிகுந்த செயல்பாடுகளை தனது படைப்பின் ஊடாக தொடர்ந்து அம்பலப்படுத்தியவர். தனது படைப்புகளுக்காக 6 தேசிய விருது, 4 மாநில விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர். அதோடு தனது தொடர் திரைப் பங்களிப்பிற்காக 2004ஆம் ஆண்டு இந்திய அரசின் உயர் விருதான ‘பத்மஸ்ரீ’ வருதும் பெற்றவர்.
16வயதினிலே, கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, முதல் மரியாதை என்று கிராமத்துப் படங்கள் மட்டுமல்லாமல், என் உயிர் தோழன், நிழல்கள் உள்ளிட்ட மாநகரங்களின் துயர்மிகு வாழ்வையும் படம்பிடித்துக் காட்டியவர்.
தனது கடைசி காலங்களில், நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்தும் நல்ல திரைக்கலைஞராகவும் வலம் வந்தார்.
தமுஎகசவை பொறுத்த அளவில் கடந்த 40ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல உறவோடு இருந்து வந்துள்ளார்.
1996 ஜனவரி 5,6,7 மூன்று நாள்கள் தமுஎச மாநிலக்குழு திண்டுக்கல் நகரில் நடத்திய இயக்குநர் பாரதிராஜாவின் படைப்புகளை குறித்த மூன்று நாள் ஆய்வரங்கு நிகழ்வில், தான் அறிமுகப்படுத்திய பிரபல திரைக் கலைஞர்களோடு கலந்து கொண்ட பாரதிராஜா, அவர் படைப்புகள் குறித்த நமது தோழர்களின் பாரட்டுக்களையும்,கூர்மையான விமர்சனங்களையும் ஒரே மாதிரியான உவகையோடு ஏற்றுக்கொண்டார். வாய்ப்புள்ள இடங்களில் தொடந்து நம் மேடைகளில் பங்கேற்றும் வந்தார்.
2005ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் நடைபெற்ற தமுஎச 10ஆவது மாநில மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதோடு,
நம் அமைப்பு மேடைகளில் கலந்துகொள்வதை மதிப்பு வாய்ந்த ஒன்றாகத் தான் கருதுவதாகவும் கூறினார்.
*இயக்குநர் பாரதிராஜாவின் இழப்பு தமிழ்த் திரை உலகிற்கு மட்டுமல்ல, தமிழ்க் கலை இலக்கிய உலகிற்கும் பேரிழப்பாகும்* அவரை இழந்து வாடும் ரசிகர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
