தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய அரசியல் ஆலோசனைகளில் ஈடுபடுகிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்தச் சந்திப்பில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்கின்றனர். தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஏற்பட்ட பின்னடைவு மற்றும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடந்து முடிந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை தலா இரண்டு இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளன. ஒரு வலுவான எதிர்க்கட்சியாகச் சட்டமன்றத்தில் எவ்வாறு செயல்படுவது மற்றும் கூட்டணி ஒற்றுமையைத் தக்கவைப்பது போன்ற விவகாரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. குறிப்பாக, தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததற்கான காரணங்கள் மற்றும் கள நிலவரங்கள் குறித்து ஸ்டாலின் கேட்டறிய உள்ளார்.

மறுபுறம், தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கேரளா மற்றும் தமிழக அரசியல் சூழல்களைக் கவனித்து வருவதால், முறையான ராஜினாமா மற்றும் புதிய அரசு அமைப்பதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகள் இன்னும் முழுமை பெறவில்லை. இத்தகைய சூழலில், தனது கூட்டணிக் கட்சிகளுடன் ஸ்டாலின் நடத்தும் இந்த ஆலோசனைக் கூட்டம் தமிழக அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மேலும் காங்கிரஸ் 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், அவர்கள் தவெகவுடன் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்தநிலையில், இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்குமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version