தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், சட்டமன்றத்தில் தனது பலத்தை நிரூபிக்க விஜய்க்கு இரண்டு நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த இடைப்பட்ட காலத்தில் கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதங்களை ஆளுநரிடம் சமர்ப்பிக்கவும், சட்டமன்றத்தில் வாக்கெடுப்பின் போது ஆதரவை திரட்டவும் விஜய் தரப்பு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்களும் தவெக-விற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.
மேலும் விசிக, இடதுசாரிகள் மற்றும் சில சுயேட்சை உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால், போதிய பலத்துடன் ஆட்சியைத் தக்கவைக்க முடியும் என்று அக்கட்சியின் நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 2 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார். அதாவது முதல்வராக பதவியேற்ற 2 நாட்களில் அதாவது மே 9ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். நாளை முதலமைச்சராகப் பதவியேற்றவுடன், தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் நடைபெறும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் விஜய் தனது அரசின் பெரும்பான்மையை அதிகாரப்பூர்வமாக நிரூபிப்பார். ஆளுநர் வழங்கிய இந்த இரண்டு நாள் அவகாசம் தமிழக அரசியலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
