தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், மாநிலத்தின் அரசியல் வரைபடம் தலைகீழாக மாறத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாக திமுக தலைமையில் நீடித்து வந்த ‘மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி’ தற்போது சிதறத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.
விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவு
தவெக 108 இடங்களைப் பெற்றுள்ள நிலையில், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை அடைய அதற்கு இன்னும் 12 இடங்கள் தேவைப்படுகின்றன. ( திருச்சி கிழக்கு தொகுதியை விஜய் ராஜினாமா செய்வார். இன்னொரு எம்.எல். ஏ சபாநாயகர் ஆகிவிடுவார்) .இந்தச் சூழலில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தவெக-விற்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்டை மாநிலமான கேரளாவில் காங்கிரஸ் பெற்றுள்ள எழுச்சி, தமிழகத்திலும் அக்கட்சியைத் தனது பிடியை வலுப்படுத்தத் தூண்டியுள்ளது.
குறிப்பாக, டெல்லி காங்கிரஸ் மேலிடம் ‘இந்தியா’ (INDIA) கூட்டணியில் இருந்து திமுகவைக் கழற்றிவிட்டு, அதற்குப் பதிலாக தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்க்கத் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் தனது அரசியல் எதிர்காலத்தை உறுதிப்படுத்த, திமுகவை விட விஜய்யே சிறந்த தேர்வாக இருப்பார் என அக்கட்சி கருதுவதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
விசிக மற்றும் இடதுசாரிகளின் நிலைப்பாடு
காங்கிரஸின் இந்த முடிவைத் தொடர்ந்து, திமுகவின் மற்ற முக்கிய கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் (விசிக) தவெக-விற்கு ஆதரவளிப்பது குறித்துப் பரிசீலிக்கத் தொடங்கியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறுகையில், “கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக இடதுசாரி கட்சிகளுடன் ஆலோசிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக மூலமாக பாஜக தமிழகத்தில் காலூன்றுவதை அனுமதிக்கக் கூடாது என்கிற நோக்கத்தில், இடதுசாரி கட்சிகளும் விஜய்க்கு ஆதரவு அளிக்கவே அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதனால் திமுக தலைமையிலான மாபெரும் கூட்டணி தற்போது பலவீனம் அடைந்து வருகிறது.
“முதுகில் குத்திவிட்டது காங்கிரஸ்” – திமுக கடும் தாக்குதல்
கூட்டணிக் கட்சிகளின் இந்தத் திடீர் மாற்றத்தால் திமுக கடும் அதிர்ச்சியில் உள்ளது. இது குறித்து திமுக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் சரவணன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில்:
“திமுக தொண்டர்களின் உழைப்பும் வியர்வையும் வீணாகிவிட்டது. இத்தனை காலம் தோளோடு தோள் நின்று வெற்றிக்கு உதவிய திமுகவிற்கு, காங்கிரஸ் கட்சி முதுகில் குத்திவிட்டது” எனக் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் இந்தத் துரோகத்தை திமுக தொண்டர்களால் ஜீரணிக்க முடியவில்லை என்பதே நிதர்சனம். திமுகவின் நலத்திட்டங்கள் மற்றும் ‘திராவிட மாடல்’ ஆட்சியை முன்னிறுத்தியும் இந்தத் தோல்வி ஏற்பட்டது அக்கட்சிக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.
இயல்பானதுதான்- காங்கிரஸ்
நீண்டகாலமாக காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்துப் பயணித்து வருகிறது. ஒரு கூட்டணியில் இருக்கும்போது மேடு பள்ளங்கள் ஏற்படுவது இயல்பு. நானே பலமுறை பகிரங்கமாக மோதியிருக்கிறேன். இப்போது, தமிழகத்தின் நலனையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, தமிழக காங்கிரஸ் கமிட்டி ஏகமனதாக தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) கூட்டணி சேர முடிவெடுத்துள்ளது என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கூறியுள்ளார்.
- பா. முகிலன்
