தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
கலைஞர் கருணாநிதியின் 103வது பிறந்தநாள் இன்று (ஜூன் 3) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கலைஞரின் பிறந்தநாளையொட்டி மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்கள் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. கலைஞரின் நினைவிடத்தில் ‘புத்தெழுச்சி நாள் விழா- அகவை 103’ என்ற வாசகத்துடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

கலைஞர் கருணாநிதியின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா நினைவிடத்தில் “தம்பி கருணாநிதியின் உழைப்பு இரவும் பகலும் அறியாதது” என்ற வாசகம் எழுதப்பட்டு இருந்தது.

இந்தநிலையில், கலைஞர் மற்றும் அண்ணா நினைவிடத்திற்கு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். உடன் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பலர் உடன் இருந்தனர்.
அதனைத்தொடர்ந்து ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கலைஞர் திருவுருவச் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரின் திருஉருவ படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர், கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி வளாகத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
