தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் மற்றும் 419 போதைப் பொருள் குற்றவாளிகள் என 1,263 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அமைதியான சூழலை உருவாக்கவும் ரவுடிகள் மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு முதலமைச்சர் விஜய் காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, கடந்த 3 நாட்களில் 15,349 ரவுடிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் வரலாற்றுப் பதிவேட்டில் உள்ள ரவுடிகள் 488 பேர் மற்றும் வரலாற்றுப் பதிவேட்டில் இல்லாத ரவுடிகள் 356 பேர் என மொத்தம் 844 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் தொடர்பான சட்டத்தின் கீழ் 294 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 419 போதைப்பொருள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 1 கோடியே 42 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 267 கிலோ கஞ்சா மற்றும் 2,476 போதை மருந்து மாத்திரைகள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் குற்றச் செயல்களை முற்றிலும் ஒழிக்கவும், சமூக விரோத சக்திகளைக் கட்டுக்குள் கொண்டு வரவும் தமிழ்நாடு காவல் துறை இத்தகைய தீவிர நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும் என்று டி.ஜி.பி. அலுவலகம் தெரிவித்துள்ளது.
