தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலுக்குத் தேசிய கீதத்திற்கு இணையான சட்டப் பாதுகாப்பை வழங்கும் புதிய மசோதா, நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று (ஜூலை 20) மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘தேசிய அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா 2026’ (Prevention of Insults to National Honour Amendment Bill) என்ற புதிய சட்டத் திருத்த மசோதாவை இன்று அறிமுகப்படுத்துகிறார். தற்போதைய சட்டப்படி தேசியக் கொடி, இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் தேசிய கீதம் (ஜன கண மன) ஆகியவற்றை அவமதிப்போருக்கு மட்டுமே தண்டனை வழங்கும் வழிவகை உள்ளது. தற்போது கொண்டு வரப்படும் புதிய திருத்தத்தின் மூலம் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலும் இந்த சட்ட வரம்பிற்குள் கொண்டு வரப்படுகிறது.
இந்த புதிய சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டால், ‘வந்தே மாதரம்’ பாடலை யாரேனும் வேண்டுமென்றே அவமதித்தாலோ, அதனைப் பாடுவதைத் தடுத்தாலோ அல்லது அது பாடப்படும் கூட்டங்களில் இடையூறு விளைவித்தாலோ அது குற்றவியல் நடவடிக்கையாகக் கருதப்படும். அவ்வாறு குற்றம் நிரூபிக்கப்படும் நபர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
வங்கக் கவிஞர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி இயற்றிய ‘வந்தே மாதரம்’ பாடல் இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கியப் பங்காற்றியது. இந்தப் பாடலின் 150-வது ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகவும், தேசியப் பாடலுக்கு உரிய சட்ட அங்கீகாரத்தை வழங்கும் நோக்கிலும் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமை மற்றும் தனிமனித சுதந்திரத்திற்கு எதிராக இந்த சட்டம் அமையக்கூடும் என்று கூறி எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால், நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் இன்று புயலைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
