மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி, இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. நேற்றுடன் (ஜூன் 10) பிரதமர் மோடி தொடர்ந்து 4,399 நாட்கள் பதவியில் இருந்து, இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் சாதனையை முறியடித்துள்ளார். இதன் மூலம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தில் இந்தியாவில் மிக நீண்ட காலம் தொடர்ந்து பிரதமராக இருந்தவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இதற்கு முன், 1952 முதல் 1964 வரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக நேரு தொடர்ந்து 4,398 நாட்கள் பதவியில் இருந்ததே சாதனையாக இருந்தது.
இந்தநிலையில், டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்களின் கூட்டத்தில், இந்த வரலாற்றுச் சாதனையைக் பாராட்டி பிரதமர் மோடிக்கு வாழ்த்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கொண்டு வந்த இத்தீர்மானத்தை நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ வழிமொழிந்தார்.
இந்த பாராட்டு குறித்துப் பேசிய பிரதமர் மோடி, “இதை நான் ஒரு தனிநபர் சாதனையாகப் பார்க்கவில்லை. இது நமது கூட்டணியின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி. எனவே, இந்தத் தீர்மானத்தை அர்ப்பணிப்புடன் உழைத்த பாஜாக தொண்டர்கள் உட்பட அனைத்து என்.டி.ஏ உறுப்பினர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன். ‘நாடுதான் முதலில்’ என்ற எண்ணத்தோடு செயல்படும்போது, எந்தவொரு கடினமான முடிவையும் எடுப்பது எளிதாகிறது” என்றார்.
கூட்டத்தில் அரசின் பொருளாதார சாதனைகள் குறித்துப் பேசிய பிரதமர், உலகப் பொருளாதார மந்தநிலைக்கு மத்தியிலும் இந்தியா 2025-26 நிதியாண்டில் 7.7% வளர்ச்சி விகிதத்தையும், மார்ச் 31-டன் முடிந்த காலாண்டில் 7.8% வளர்ச்சி விகிதத்தையும் பதிவு செய்து சாதனை படைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், தனது 12 ஆண்டு கால ஆட்சியில் நடுத்தர வர்க்கத்தினருக்கு ஆதரவாக ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை வரிவிலக்கு அளிக்கப்பட்டிருப்பது மற்றும் எளிய நேர்முக வரி முறை கொண்டு வரப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த கால காங்கிரஸ் ஆட்சியை விமர்சித்த பிரதமர் மோடி, 2014-க்கு முன் நாட்டில் நிலவிய ‘தாழ்வு மனப்பான்மை மற்றும் விரக்திக்கு’ முற்றுப்புள்ளி வைத்து, என்.டி.ஏ புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியதாகக் கூறினார். ஜம்மு காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கம், வடகிழக்கு மாநிலங்களில் அமைதி முயற்சிகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்ற துணிச்சலான முடிவுகள் இந்த ஆட்சியில் சாத்தியமாக்கப்பட்டுள்ளதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
