பிரிட்டனில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக அரங்கேறி வரும் ‘குரூமிங் கேங்க்ஸ்’ (Grooming Gangs) எனப்படும் திட்டமிட்ட பாலியல் வன்கொடுமை கும்பல்களின் அட்டூழியங்கள் குறித்த சாட்சியங்கள், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளன.

பிரிட்டன் நாடாளுமன்ற சுயேச்சை எம்பியான ருபெர்ட் லோவ், இங்கிலாந்தின் 85-க்கும் மேற்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட தனியார் புலனாய்வு விசாரணையின் மூலம் திரட்டப்பட்ட, பாதிக்கப்பட்ட பெண்களின் நேரடி வாக்குமூலங்களை நாடாளுமன்றத்தில் வாசித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலங்களில் உள்ள சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், தனக்கு 13 வயது இருக்கும்போது இந்த சித்திரவதை தொடங்கியதாகக் கூறிய ஒரு பெண், “கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 600 முதல் 700 வெவ்வேறு ஆண்களால் நான் வன்கொடுமை செய்யப்பட்டேன்” என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

தங்களை நாய்களைப் போலக் கூண்டில் அடைத்து வைத்ததாகவும், சில பெண்களை விலங்குகளை விட்டும் வன்கொடுமை செய்ததாகவும், அதை அங்கிருந்த ஆண்கள் சிரித்துக்கொண்டே வீடியோ எடுத்துப் பந்தயம் கட்டியதாகவும் மற்றொரு பெண் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். 12 வயதே ஆன சிறுமியின் பிறப்புறுப்பில் மதுபாட்டிலைச் செலுத்தி, அதை உடைத்துக் கொடூரம் இழைத்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.

பிரிட்டன் அரசு நடத்திய விசாரணைகளின்படி, இந்தத் திட்டமிட்ட பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களில் பெரும்பான்மையானோர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் சந்தை வியாபாரிகள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் மிக அதிகப்படியானோர் ஏழை வெள்ளை இனச் சிறுமிகள் மற்றும் கிறிஸ்தவப் பெண்கள் ஆவர். “வெள்ளை இனச் சிறுமிகளுக்கு ஒழுக்க விழுமியங்கள் குறைவு” என்ற இனரீதியான மற்றும் மதரீதியான ஒப்பீடுகளைக் கூறி, தங்களது கொடூரச் செயல்களை அந்தக் கும்பல் நியாயப்படுத்தியதாகப் பாதிக்கப்பட்டவர்கள் சாட்சியம் அளித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் உள்ளூர் அதிகாரிகளும், காவல்துறையினரும் தகுந்த நடவடிக்கை எடுக்கத் தவறியதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. “பாகிஸ்தான் கும்பல் மீது நடவடிக்கை எடுத்தால், தங்களை இனவெறியாளர்கள் என்று முத்திரை குத்தி விடுவார்களோ” என்ற அச்சத்திலேயே அதிகாரிகள் பல ஆண்டுகள் மௌனம் காத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் போலிஸ் அதிகாரிகளே இந்த அத்துமீறல்களில் ஈடுபட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டனில் இந்த ‘குரூமிங் கேங்க்ஸ்’ விவகாரம் இன்று நேற்றல்ல, கடந்த 2001-ஆம் ஆண்டிலிருந்தே ரோதர்ஹாம் (Rotherham), ரோச்டேல், ஆக்ஸ்போர்டு போன்ற 50-க்கும் மேற்பட்ட நகரங்களில் பரவலாக அரங்கேறி வருகிறது. ரோதர்ஹாம் நகரில் மட்டும் 1997 முதல் 2013 வரையிலான காலக்கட்டத்தில் 1,400-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2023-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ரிஷி சுனக் அமைத்த சிறப்புப் பணிக்குழு, கடந்த ஓராண்டில் மட்டும் இதுதொடர்பாக 550-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“இந்தத் துணிச்சலான பெண்களின் சாட்சியங்களுக்கு நாடாளுமன்றம் செவிசாய்த்து, இனியாவது கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்” என்று எம்பி ருபெர்ட் லோவ் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version