தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாகவும், முந்தைய சாதனைகளை உடைக்கும் ஒரு வரலாற்று நிகழ்வாகவும் பதிவாகியுள்ளது. தமிழகத்தை தசாப்தங்களாக ஆண்டு வந்த இரு பெரும் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று புதிய சாதனை படைத்துள்ளார்.

2026 ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவாக 85.1% வாக்குகள் பதிவாகின. மே 4 அன்று வெளியான தேர்தல் முடிவுகளில், முதல்முறையாக தேர்தலைச் சந்தித்த விஜய்யின் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியில் தோல்வியைத் தழுவ, தவெக தலைவர் விஜய் தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். பெரும்பான்மைக்கு (118 இடங்கள்) தேவையான சில இடங்கள் குறைவாக இருந்ததால், காங்கிரஸ் மற்றும் சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் ஆதரவோடு கடந்த மே 10 அன்று விஜய் தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றார்.

தமிழகத்தில் இதற்கு முன் முதலமைச்சரான அண்ணா முதல் எடப்பாடி பழனிசாமி வரை அனைவரும் ஒரு காலத்திலாவது சட்டமன்ற உறுப்பினராக  இருந்து, அவையின் செயல்பாடுகளைப் பழகிய பின்பே முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தனர்.

ஆனால், விஜய் மட்டுமே சட்டமன்றத்திற்குள் முதல்முறை காலடி எடுத்து வைக்கும் போதே முதலமைச்சராக” நுழைந்துள்ளார்.

அதாவது, பேரறிஞர் அண்ணா, 1957-ல் காஞ்சிபுரம் தொகுதியில் இருந்து முதல்முறையாக MLA-வாகத் தேர்வு செய்யப்பட்டு சட்டமன்றத்திற்குள் சென்றார். அதன் பிறகே 1967-ல் முதல்வர் ஆனார்.

இதேபோல் கலைஞர் கருணாநிதியும் 1957-ல் குளித்தலை தொகுதியில் வென்று முதன்முதலில் MLA-வாக அவைக்குள் நுழைந்தார். 1969-ல் தான் முதல்முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்றார்.

எம்.ஜி.ஆரும் 1967-ல் பரங்கிமலை தொகுதியில் இருந்து திமுக சார்பில் முதன்முதலில் MLA-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1977-ல் அதிமுகவை ஆட்சியில் அமர்த்தி முதல்வரானார்.

ஜெ.ஜெயலலிதா, 1989 சட்டமன்றத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் வென்று, முதல்முறையாக MLA-வாகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் அவைக்குள் சென்றார். அதன் பின்னர் 1991-ல் தான் முதல்வர் பொறுப்பை ஏற்றார்.

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி, இவர்கள் இருவரும் முறையே 2001 மற்றும் 1989 ஆகிய ஆண்டுகளில் முதன்முதலில் MLA-க்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, நீண்ட கால சட்டமன்ற அனுபவத்திற்குப் பிறகே முதல்வராயினர். இதேபோல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 1989-ல் ஆயிரம் விளக்கு தொகுதியில் முதன்முறையாக MLA-வாக வென்று சட்டமன்றத்திற்குள் சென்றார். 2021-ல் தான் முதல்வராகப் பொறுப்பேற்றார்.

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற சில முக்கிய அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். குறிப்பாக, பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இருந்த சுமார் 700 டாஸ்மாக்  கடைகளை மூடுவதற்கு தவெக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், சட்டம் மற்றும் தேர்தல் விதிகளின்படி இரு தொகுதிகளில் வென்ற விஜய், தனது திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்துவிட்டு பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினராக தொடர்கிறார். இதற்கிடையே, அதிமுகவைச் சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்துள்ளதால், தமிழக அரசியல் களம் தற்போதும் பரபரப்பாகவே நகர்ந்து கொண்டிருக்கிறது.

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து பல சாதனைகளைப் படைத்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரிசையில், “சட்டமன்றத்திற்குள் நுழையும் போதே முதலமைச்சர்” என்ற இந்த அரிய சாதனை மூலம் விஜய் தனது அரசியல் பயணத்தின் முதல் பக்கத்திலேயே ஒரு புதிய வரலாற்றை எழுதியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version