கல்வி நிறுவனங்களை, அரசியல் பிரசாரத்துக்காக தவறாக பயன்படுத்தி, மாணவர்களை அரசியல் ரீதியாக சுரண்டும் த.வெ.க.வுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, அ.தி.மு.க. நிர்வாகி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அ.தி.மு.க.,வின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லுாரி வளாகங்களில், த.வெ.க. நிர்வாகிகள் நுழைந்து, தங்கள் கட்சி தலைவர்களை முன்னிலைப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாகவும், தலைவருக்கு ஆதரவாக, விஜய் அண்ணா, விஜய் மாமா என, மாணவர்களை வாழ்த்து கோஷங்கள் எழுப்பச் செய்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
தேசிய தலைவர்கள் புகைப்படங்களுடன், த.வெ.க. தலைவர் படத்தையும் காட்சிப்படுத்துவதாகவும்,
கல்வி நிறுவனங்களில் சினிமா பாடல்கள் பாடப்படுகின்றன என, சமூக ஊடகங்கள், ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்களில், அரசியல் பிரசாரத்துக்காக தவறாகப் பயன்படுத்தி, மாணவர்களை அரசியல் ரீதியாக சுரண்டும் த.வெ.க.வுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கும், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கும் புகார் அனுப்பி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அரசியல் சாசன விதிகளையும், கல்வி உரிமை சட்ட விதிகளையும் மீறி செயல்படுவது குறித்து, உடனே விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும், இந்நிகழ்வுகளை அனுமதிக்கும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவன அதிகாரிகளுக்கு எதிராக, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கல்வி நிறுவனங்களில், அரசியல் பிரசாரங்களை தடை செய்து, விதிமுறைகளை வகுக்க வேண்டும் என, மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
த.வெ.க.,வின் இந்த செயல்பாடுகள், பள்ளி, கல்லுாரிகளில் கல்வி பயிலும் சூழலை இடையூறாக உள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில், திங்கள் கிழமை விசாரணைக்கு வர உள்ளது.
