தவெக சார்பில் வழங்கப்படும் விருப்ப மனுக்கள பெற பனையூர் அலுவலகத்திற்கு யாரும் வரவேண்டாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், வேட்பாளர் பட்டியல் தயாரிப்பில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தவெக சார்பில் நேற்று ( 06.02.2026 ) முதல் விருப்ப மனு விநியோகம் தொடங்கப்பட்டது. இதனைப் பெறுவதற்காக பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

விருப்ப மனு விநியோகம் தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே 10,000 மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாகவும், வரும் 14-ம் தேதி வரை அலுவலகத்தில் நிர்வாகிகள் பொறுமையாக விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பொதுச்செயலாளர் ஆனந்த், விருப்ப மனுக்களை பெற யாரும் கட்சி அலுவலகம் வரவேண்டாம் என கூறியிருப்பது நிர்வாகிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருப்ப மனு விநியோகத்தின் முதல் நாளில், ஆயிரக்கணக்கான மக்கள் பனையூர் பகுதியில் குவிந்ததால், வாகனங்கள் நிறுத்துவதில் ஏற்பட்ட சிக்கல், அங்கு வசிக்கும் மக்களுக்கு ஏற்பட்ட இடையூறு, அவர்களது கார்களை அனுமதிப்பதில் ஏற்பட்ட தாமதம் என பலகட்ட பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் நேரடியாகவே நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் புகாரும் அளித்திருந்தனர். ஆகையால் பனையூரில் விருப்ப மனுக்களை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆகையால் தான், விருப்ப மனுக்களை பெற யாரும் பனையூர் தலைமை அலுவலகத்திற்கு வரவேண்டாம் என ஆனந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ”தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்கள், இன்று ( 07.02.2026 ) முதல் கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் விருப்ப மனுக்களை பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் தலைமை அலுவலகம் இருக்கும் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எவ்வித இட நெருக்கடியும் ஏற்படக் கூடாது என்பதை கருத்தில் கொண்டுள்ளோம்.

எனவே மக்கள் மீது அக்கறை கொண்ட தளபதி விஜய்யின் அறிவுறுத்தலின் பேரி, விருப்ப மனுக்களை பெற நிர்வாகிகள் யாரும் தலைமை அலுவலகம் வர வேணாம் எனவும், அதற்கு பதில் மனுக்களை இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்” எனவும் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version