தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அனைத்து பெரிய கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுக சார்பில் ஏற்கனவே இருந்த கூட்டணி கட்சிகள் அதே கூட்டணியில் தொடரும் நிலையில், தொகுதிகளை மட்டும் அதிகம் கேட்டு பெறக்கூடிய வகையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இன்னொரு பக்கம் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பாஜக, அமமுக, அன்புமணி தலைமையிலான பாமக கட்சிகள் ஏற்கனவே இணைந்துள்ளன. மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டு நேர்காணலும் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பது தொடர்பாகவும், கூட்டணியில் இணைய விருப்பமுள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாகவும், பேச்சுவார்த்தை குழு ஒன்றை பாஜக அமைத்துள்ளது. இக்குழுவின் தலைவராக பாஜக மாநிலத் துணைத் தலைவர் விபி.துரைசாமியும், துணைத் தலைவராக மாநில செயற்குழு உறுப்பினர் பாலச்சந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ சட்டமன்ற தேர்தலை சிறப்பாக எதிர்கொண்டு மகத்தான வெற்றியினை பெற்றிடும் வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் பல அமைப்புகள் இணைய விர்ப்பம் தெரிவித்துள்ள நிலையில், அமைப்பு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டணிக்கு வலுசேர்த்திட விபி துரைசாமி தலைமையில் குழு” அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
