விளாத்திகுளம் மாணவி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தர்ம முனிஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகிலுள்ள வேடநத்தம் கிராமம், மார்ச் 10, 2026 அன்று மாலை அதிர்ச்சியூட்டும் சம்பவத்தால் உலுக்கப்பட்டது. பிளஸ் டூ பொதுத் தேர்வை சிறப்பாக எழுதி முடித்த 17 வயது மாணவி, இயற்கை உபாதைக்காக அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றபோது, கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, பின்னர் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மறுநாள் காலையில் மாணவியின் சடலம் அருகிலுள்ள குமாரபுரம் காட்டுப் பகுதியில் மீட்கப்பட்டது. சடலத்தின் நிலை கண்ட உள்ளூர் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் குற்றவாளியை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். சடலத்தைப் பெற மறுத்து சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். போலீஸார் சமாதானப் பேச்சு நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர்.
இந்த வழக்கை தீவிரமாக எடுத்துக்கொண்ட தூத்துக்குடி காவல்துறை, 10 தனிப்படைகளை அமைத்து விசாரணையைத் துரிதப்படுத்தியது. 98 CCTV கேமராக்களின் பதிவுகள், செல்போன் சிக்னல் லொக்கேஷன் தரவுகள், பிற அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த 38 வயது தர்ம முனீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது, குற்றவாளி சம்பவ இடத்துக்கு எப்படி வந்தார், மாணவியை எவ்வாறு குறிவைத்தார் என்பது உள்ளிட்ட விவரங்கள் துல்லியமாக கண்டறியப்பட்டன.
மாணவியின் உடலில் கண்டெடுக்கப்பட்ட ஆதாரங்கள், டிஎன்ஏ சோதனை முடிவுகள் உள்ளிட்டவை குற்றவாளியுடன் பொருந்தியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இன்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றவாளிக்கான தண்டனை விவரங்கள் மதியம் 12:30 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளன. இந்தத் தீர்ப்பு மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளித்தாலும், இளம் உயிர் ஒன்று கொடூரமாக பறிபோனது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெண் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்வியெழுப்பியுள்ளது. கிராமப்புறப் பகுதிகளில் பெண்கள் மற்றும் மாணவிகள் பாதுகாப்பாக இருக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என உள்ளூர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. மாணவியின் மரணம் தமிழகத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ள நிலையில், குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
