மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ 24 மணி நேரக் கெடு விதித்துள்ளது. இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் மிகப்பெரிய அளவில் தீவிரப்படுத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
டெல்லி அரசியலமைப்பு மன்றத்தில் (Constitution Club) மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் அடங்கிய அரசுப் பிரதிநிதிகளுடன் சிஜேபி குழுவினர் இன்று பிற்பகல் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சந்திப்பில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் மாணவர் நலன் சார்ந்த மூன்று முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜே.பி. நட்டா, சிஜேபி கட்சியினரின் கோரிக்கைகள் குறித்து நாளை முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில்,பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் ஜந்தர் மந்தரில் பேசிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மற்றும் பேச்சாளர் அசுதோஷ் ரான்கா, “வினாத்தாள் கசிவு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் 24 மணி நேரத்திற்குள் பதவி விலக வேண்டும். மத்திய அரசு தங்களது இந்தக் கோரிக்கையை ஏற்கத் தவறினால், தற்போது டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டமானது நாடு முழுவதும் பரவி, முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய போராட்டமாக உருவெடுக்கும்” என்று தெரிவித்தனர்.

மாணவர்களின் கோரிக்கைகளுக்காக 26 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், மத்திய அமைச்சர்கள் வேண்டுகோளை ஏற்றுத் தனது உண்ணாவிரதத்தை நிறைவு செய்துள்ளார். இருப்பினும், கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தி ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும், நாடு தழுவிய அளவிலான போராட்டத்திற்குத் தயாராகி வருவதாகவும் சிஜேபி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, டெல்லியில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க 18 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாளை மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
