தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இரண்டு நாள்கள் பயணமாக நாளை டெல்லி செல்கிறார். முதலமைச்சராக பொறுப்பேற்றபின் அவர் மேற்கொள்ளும் முதல் டெல்லி பயணம் இதுவாகும்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய், தமிழகத்தின் முதலமைச்சராக கடந்த 10ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் இரண்டு நாள் பயணமாக நாளை முதலமைச்சர் ஜோசப் விஜய் டெல்லி செல்ல உள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக தேசிய கட்சித் தலைவர்களை சந்தித்து அவர் வாழ்த்து பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாளை காலை 10 மணியளவில் தனி விமானத்தில் டெல்லி செல்லும் முதலமைச்சர் அங்கு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து மாலை 4.30 மணி முதல் 5 மணி வரை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் வைத்து முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளார்.
அப்போது தமிழகத்தின் நலம் சார்ந்த திட்டங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை முதலமைச்சர் வழங்க உள்ளார். குறிப்பாக, தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள், நிலுவையில் உள்ள நிதி விடுவிப்பு, மீனவர்கள் பிரச்சனை, மேகதாது விவகாரம் உள்ளிட்டவை குறித்து பிரதமரிடம் நேரில் கடிதம் வழங்கவுள்ளார்.
அதனை தொடர்ந்து குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரையும் மரியாதை நிமித்தமாக விஜய் சந்திக்கவுள்ளார்.
தமிழகத்தில் அரசியல் சூழல் அடுத்தடுத்து பரபரப்பாக காணப்படும் நிலையில், பிரதமர் மோடியுடனான முதலமைச்சர் விஜய்யின் நாளைய சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
