சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார்.
தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், புதிய அரசின் முதல் சட்டசபைக் கூட்டம் கடந்த 18-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. மறைந்த முன்னாள் எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்ட இந்த அமர்வு, மாநில அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது.
19 மற்றும் 22-ம் தேதிகளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தினர். நேற்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக சட்டமன்றத் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக சட்டமன்றத் தலைவர் சவுமியா அன்புமணி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.
இன்று சட்டசபை நிறைவு நாளானதால், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த முதலமைச்சர் ஜோசப் விஜய், முக்கிய உரையாற்றினார். தமிழக மக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்த அவர், “மக்கள் சேவையில் அனைவரும் ஒன்றிணைந்து பயணித்தால் தமிழகம் நிச்சயம் இந்தியாவிலேயே முன்னிலை வகிக்கும்” என்று வலியுறுத்தினார். சினிமா படப்பிடிப்பில் இருந்து நேரடியாக சட்டசபைக்கு வந்ததைப் போல சிலர் பிம்பத்தை உருவாக்குவதாகவும், அது வெறும் ‘ரீல்’ தான், ‘ரியல்’ அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்க்கட்சியினர் எதிர்த்து பேசுவதன் மூலம் தங்கள் பொறுப்பை நிறைவேற்றுவதாகக் குறிப்பிட்ட அவர், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார். “கருத்துகளில் வேறுபாடு இருந்தாலும், மாநில நலனுக்காக ஒன்றுபட்டு செயல்பட்டால் மட்டுமே தமிழகத்தை உயர்த்த முடியும்” என்று அழுத்தமாகக் கூறினார். தான் முதலமைச்சராக உயர்ந்ததற்கு மக்களின் இதயங்களில் பெற்ற இடமே காரணம் என்பதை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்ட விஜய், சினிமா துறையில் தனது வளர்ச்சிக்கு தமிழக மக்களின் அன்பும் ஆதரவுமே முக்கிய காரணம் என்றார்.
அரசியலில் ஈடுபட்டதால் தனது படங்கள் சந்தித்த சிரமங்கள் பற்றியும் அவர் குறிப்பிட்டார். கரூர் சம்பவத்தில் 41 உயிர்களை இழந்த வேதனையை மிகுந்த வருத்தத்துடன் நினைவுகூர்ந்த முதலமைச்சர், “அந்த வலி எங்கள் மனதில் என்றும் நீங்காது. நம்மீது பழி சுமத்தப்பட்ட கொடுமை வேறு மட்டத்தில் இருந்தது” என்று தெரிவித்தார். மக்கள் பணியே அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் முதன்மை கடமை என வலியுறுத்திய அவர், அரசியல், நிர்வாகம், மக்கள் நலன் ஆகியவற்றில் ஒருங்கிணைந்து செயல்பட அனைவரையும் அழைப்பு விடுத்தார்.
இந்த முதல் சட்டசபைக் கூட்டம், புதிய அரசின் கொள்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் ஆக்கபூர்வமான விமர்சனங்களை வரவேற்பதாகவும், மாநில வளர்ச்சிக்கு அனைத்துத் தரப்பினரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதையும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் உரை எடுத்துக்காட்டியது.

