தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் முழுநேர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பாக நடித்துள்ள கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’, வரும் 23 -ம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
ஹெச். வினோத் இயக்கத்தில், அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம், ஒரு சாதாரண மனிதன் மக்கள் தலைவனாக உருவெடுக்கும் அரசியல் அதிரடித் திரைப்படமாகத் தயாராகியுள்ளது. இதில் விஜய் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். சென்சார் வாரியத்தின் கடுமையான தணிக்கை நடைமுறைகள், நீதிமன்ற வழக்குகள் மற்றும் கடந்த ஏப்ரல் மாதம் நேரிட்ட இணைய கசிவு போன்ற பல்வேறு தடைகளைத் தாண்டி, இத்திரைப்படம் ‘ஏ’ சான்றிதழுடன் தற்போது ரிலீசுக்குத் தயாராகியுள்ளது.
இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ முன்பதிவு தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது.
முதற்கட்டமாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ‘ஜனநாயகன்’ படத்திற்கான முன்பதிவு தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே பல்லாயிரக்கணக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. அங்கு ஜூலை 23 அன்று காலை 6 மணிக்கே முதல் நாள் முதல் காட்சி (FDFS) திரையிடப்பட உள்ளதால், எல்லையோரத் தமிழ்நாட்டு ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். தமிழகத்திலும் முக்கிய நகரங்களில் டிக்கெட் முன்பதிவு தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். உலகம் முழுவதும் 3,000-க்கும் அதிகமான திரைகளில் வெளியாகவுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், விஜய்யின் திரைப்பயணத்தில் மிக பிரம்மாண்டமான வசூல் சாதனையைப் படைக்கும் என விநியோகஸ்தர்கள் கணித்துள்ளனர்.
