நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதைத் தொடர்ந்து, போராட்டக் களத்தில் உறுதியாக நின்ற மாணவர்களுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்துகளையும் பாராட்டுதலையும் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர், மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்ற போராட்டங்கள் தீவிரமடைந்தன. தர்மேந்திர பிரதான் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 20ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணியின் போது மாணவர்கள், இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி சம்பவங்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தின.
மாணவர்களின் தொடர் போராட்டத்தின் விளைவாக, மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது. இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்தநிலையில், 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடப்பதற்கு முன்பாகவே மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அமைச்சரின் ராஜினாமாவைத் தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுகள் என்று குறிப்பிட்டுள்ளார். ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும், தங்களின் எதிர்காலத்தையும் பாதுகாக்க வீதியில் இறங்கிப் போராடிய ஒவ்வொரு இளைஞரையும், மாணவரையும் நினைத்து பெருமை கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
