தமிழகத்திலும் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைத் தொடங்குவது மற்றும் பாமகவில் இருந்து விலகி அக்கட்சியில் இணைவது தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமியுடன் ஸ்ரீகாந்தி மற்றும் முகுந்தன் பரசுராமன் ஆகியோர் முக்கிய ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலின் போது, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடுகளும் மோதலும் ஏற்பட்டது. இதையடுத்த அரசியல் நகர்வாக, பாமகவின் ராமதாஸ் அணியின் செயல் தலைவராக ஸ்ரீகாந்தி நியமிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
தேர்தலுக்குப் பிறகு அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் இடையே சமாதானம் ஏற்பட்டது. தந்தை ராமதாசை அன்புமணி குடும்பத்துடன் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றதையடுத்து, இருவருகிகும் சுமூகமாக சூழல் ஏற்பட்டது. இந்தநிலையில், தனது பிறந்தநாள் நிகழ்ச்சியில் அரசியல் துறவறம் மேற்கொள்ள இருப்பதாகவும், பாமகவை இனி அன்புமணி பார்த்துக் கொள்வார் என்று ராமதாஸ் அறிவித்தார். இந்தச் சூழலில், பாமகவில் நிலவும் புதிய சூழல் காரணமாக, ஸ்ரீகாந்தி மற்றும் முகுந்தன் பரசுராமன் ஆகியோர் பாமகவில் இருந்து விலகத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே புதுச்சேரியில் மாநில முதலமைச்சர் என். ரங்கசாமியை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்தச் சந்திப்பின் போது, பாமகவிலிருந்து விலகி என்.ஆர். காங்கிரஸில் இணைவது குறித்தும், புதுச்சேரியைத் தொடர்ந்து தமிழகத்திலும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் கிளையைத் தொடங்கி விரிவாக்கம் செய்வது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
