தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குநர் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா இன்று அதிகாலை வயது சார்ந்த உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவுக்கு துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், தமிழ்த் திரையுலகில் புதுப் பாதையை உருவாக்கிய, இயக்குநர் இமயம் திரு.பாரதிராஜா அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. கிராமிய வாழ்வையும் மனித உணர்வுகளையும் இயல்பாகவும் உயிரோட்டமாகவும் திரையில் கொண்டு வந்த முன்னோடி படைப்பாளி அவர். தனது தனித்துவமான கதை சொல்லல், மறக்க முடியாத கதாபாத்திரங்கள் மற்றும் எண்ணற்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் அழியாத முத்திரையைப் பதித்தவர். பல தலைமுறை கலைஞர்களுக்கும் திரைப்பட இயக்குநர்களுக்கும் அவர் ஒரு பெரும் ஊக்கமாக விளங்கினார்.
அன்னாரின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் மற்றும் அவரது எண்ணற்ற ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பாரதிராஜா 1941 ஜூலை 17 அன்று தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் பிறந்தார். 1977-ல் ’16 வயதினிலே’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், தமிழ் சினிமாவில் கிராமிய வாழ்க்கை, மனித உறவுகள் மற்றும் உண்மையான உணர்வுகளை துணிச்சலுடன் பதிவு செய்த புரட்சிகர இயக்குநராக உருவெடுத்தார். அவரது படைப்புகள் தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியமைத்தன.
பாரதிராஜா தனது வாழ்நாளில் ஆறு தேசிய விருதுகள், பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். ‘கிழக்கே போகும் ரயில்’, ‘மண்வாசனை’, ‘வேடம் புதிது’, ‘கருத்தம்மா’ போன்ற படங்கள் அவரது திறமையை உலகுக்கு உணர்த்தின. அவர் தயாரிப்பாளராகவும், நடிகராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் தமிழ் சினிமாவுக்கு தொடர்ந்து பங்களித்து வந்தார்.
அவரது மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எஸ். ஜோசப் விஜய், பல முன்னணி திரையுலக பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதி ஊர்வலம் நடத்த முடிவு செய்துள்ளது. பாரதிராஜாவின் மறைவு தமிழ்த் திரையுலகுக்கு மட்டுமின்றி, இந்திய சினிமா வரலாற்றிலும் பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது. அவரது படங்கள் இன்றும் இளைய தலைமுறையினருக்கு உத்வேகம் அளித்து வருகின்றன. அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் சினிமா உலகினர் ஆழ்ந்த துயரத்தில் உள்ளனர். இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் பங்களிப்பு தமிழ் சினிமாவின் தங்க நாட்களில் ஒன்றாக என்றென்றும் நினைவுகூரப்படும். அவரது படைப்புகள் வழியாக அவர் நம்முடன் என்றும் வாழ்வார்.
