தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி மாவட்ட தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பாலக்கரை பகுதியில் சிறப்பு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகர் ரவிசங்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரவிசங்கர், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் விமர்சனங்களை முன்வைத்துவிட்டு, முதலமைச்சரின் பதிலுரையை முழுமையாகக் கேட்காமல் வெளியேறியதாக குற்றம்சாட்டினார்.
“முதல்வர் பேசும்போது முறையாக சபாநாயகரிடம் அனுமதி பெற்ற பிறகே உறுப்பினர்கள் சைகை செய்தனர். ஆனால் எதிர்க்கட்சி தரப்பில் இருந்த சிலர் ஒருமையில் மற்றும் தரக்குறைவான வார்த்தைகளில் பேசியதால் தான் சபாநாயகர் அவர்களைக் கண்டித்தார்” என மேலும் தெரிவித்தார்.

முதல்வரின் பேச்சு விமர்சனத்துக்கு உள்ளாகியிருப்பதாகக் கூறப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “அவரது பேச்சை பலரும் பாராட்டியுள்ளனர். எந்த அடிப்படையில் விமர்சனம் வருகிறது என்பது புரியவில்லை” எனத் தெரிவித்தார்.
மேலும், “முதல்வர் நடிகராகவும், சபாநாயகர் இயக்குநராகவும் செயல்பட்டனர்” என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தது குறித்து கேட்கப்பட்டபோது, “அதை பார்த்து பார்த்து படிச்சாரே… கீழே பார்த்து படிச்சாரே… அதை சொல்றீங்களா?” என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.
முதல்வர் பேசிக்கொண்டிருக்கும்போதே எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தது குறித்து கேட்கப்பட்டபோது, “உங்களைப் போலத்தான் நானும் பார்க்கிறேன். அவர்களை நம்பி வாக்களித்த மக்கள் தான் அதைப் பற்றி சிந்திக்க வேண்டும்” என்று ரவிசங்கர் கூறினார்.
