அப்பா மருத்துவர் ராமதாசை சந்தித்தத்தைத் தொடர்ந்து, இனி நல்லது நடக்கும் என அன்புமணி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி புதுச்சேரி அருகே நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் தனது மகள் வழி பேரன் முகுந்தனை பாமக இளைஞரணி தலைவராக நியமிப்பதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பொதுக்குழு மேடையிலேயே ராமதாசுடன் அன்புமணி நேரடியாக கருத்து மோதலில் ஈடுபட்டார். அது முதலே பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்தது.
இதனால் பாமகவில் உள்ள அன்புமணியின் ஆதரவாளர்களை நீக்கிவிட்டு தனது ஆதரவாளர்களை நிர்வாகிகளாக மருத்துவர் ராமதாஸ் நியமித்தார்.
ஆனால் நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் ராமதாஸுக்கு இல்லை என்றும் பாமகவின் தலைவராக இருக்கக்கூடிய தனக்கே முழு அதிகாரம் இருப்பதாகவும் கூறி அன்புமணி ராமதாஸ் நீக்கப்பட்ட நிர்வாகிகள் தொடர்ந்து அதே பதவியில் செயல்படுவார்கள் என்றும் அறிவித்தார்.
இதனால் பாமக மருத்துவர் ராமதாஸ் அணி, மருத்துவர் அன்புமணி அணி என இரு அணிகளாக செயல்பட தொடங்கியது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலும் நீதிமன்றம் வாயிலாக பாமக தனக்கே சொந்தம் என உத்தரவைப் பெற்ற அன்புமணி, பாமகவின் சின்னமான மாம்பழம் சின்னத்திலேயே போட்டியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுய சின்னத்தில் தனது ஆதரவாளர்களை அன்புமணி நிறுத்திய வேட்பாளர்களை எதிர்த்து மருத்துவர் ராமதாஸ் நிறுத்தினார்.
இதனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக அன்புமணி, தனது தந்தை ராமதாசை சந்திப்பதை தவிர்த்து வந்தார். அதே நேரம்ன் தந்தை வீட்டில் இல்லாத நேரத்தில் தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று தனது தாயார் சரஸ்வதி அம்மாளை அவ்வப்போது சந்திப்பதை வழக்கமாகக் கொண்டு இருந்தார்.
கடந்த ஆண்டு ராமதாஸ் – சரஸ்வதி அம்மாள் திருமண நாள் மற்றும் ராமதாஸின் 87 ஆவது பிறந்தநாள் கொண்டாடும் போது தைலாபுரம் தோட்டத்திற்கு வருவதை அன்புமணி தவிர்த்தார். இந்த நிலையில் இன்று ராமதாஸ் மற்றும் சரஸ்வதி அம்மாள் 61 வது திருமண நாள் கொண்டாடப்பட்ட நிலையில் தனது தந்தை, தாயிடம் ஆசி பெறவும், வாழ்த்து தெரிவிக்கவும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தனது குடும்பத்தினருடன் இன்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்திற்கு வருகை தந்தார்.

மனைவி செளமியா, 3 மகள்கள், பேரன், பேத்திகள் மற்றும் தனது கடைசி தங்கையான கவிதா ஆகியோருடன் மருத்துவர் அன்புமணி, தைலாபுரம் தோட்டத்தில் உள்ள மருத்துவர் ராமதாசின் இல்லத்திற்கு வருகை தந்தார். அப்போது அன்புமணியின் குடும்பத்தினருக்கு ராமதாசின் வீட்டில் உள்ள பணியாட்கள் ஆரத்தி எடுத்தும், சூறை தேங்காய் உடைத்தும் வரவேற்பு அளித்து வீட்டிற்குள் அழைத்து சென்றனர். இதனைத்தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தனது மகனை சந்தித்ததும் உணர்ச்சி வசப்பட்ட மருத்துவர் ராமதாஸ், அன்புமணியை கட்டியணைத்து ஆரத்தழுவி கண்ணீர் விட்டு அழுதார்.
தந்தை அழுததைப் பார்த்து அன்புமணியும் அழுதார். இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவியபடி சுமார் 3 நிமிடங்களுக்கும் மேலாக கண்ணீர் விட்டு அழுதனர். இதனைக் கண்டு சுற்றி நின்றிருந்த அன்புமணியின் மனைவி செளமியா, மகள்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பமுமே அழுதனர். பின்னர் அழுத தனது தந்தை மருத்துவர் ராமதாசை அன்புமணி தேற்றி ஆசுவாசப்படுத்தினார். இதனைத்தொடர்ந்து அன்புமணியும், அவரது மனைவி செளமியாவும் மருத்துவர் ராமதாசின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

பின்னர் அருகில் இருந்த தனது பேத்திகள், கொள்ளு பேரன், பேத்திகளை அரவணைத்து மருத்துவர் ராமதாஸ் கொஞ்சி மகிழ்ந்தார். இதனைத்தொடர்ந்து மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் குடும்பத்தினர் அனைவருடனும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டனர். அப்போது மருத்துவர் ராமதாஸ் தனது மகன் அன்புமணியின் குடும்பத்திற்கு சைவ, அசைவ விருந்து அளித்துள்ளார். குடும்பமாக ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டு முடித்ததும் நீண்ட நாட்களுக்கு பிறகு அரட்டை அடித்து சிரித்து பேசி மகிழ்ந்துள்ளனர். இந்த குடும்ப சந்திப்பு இரண்டரை மணி நேரமாக நீடித்தது. இதன்பிறகு தனது தந்தை மருத்துவர் ராமதாஸ், தாய் சரஸ்வதி அம்மையார் ஆகியோரிடம் பிரியாவிடை பெற்று கொண்டு அன்புமணி குடும்பத்துடன் காரில் ஏறி சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

தைலாபுரம் தோட்டத்தில் இருந்து காரில் வெளியே வந்த அன்புமணி செய்தியாளர்களிடம் பேசுகையில்:- திருமண நாளில் தந்தை, தாயிடம் ஆசி பெற்றேன். இனி எல்லாம் நல்லதே நடக்கும் என தெரிவித்தார்.
ராமதாசும் அன்புமணியும் மீண்டும் ஒன்று சேர்வதன் மூலம் கட்சியையும், வன்னியர்சங்கத்தையும் மகன் அன்புமணியிடமே ராமதாஸ் கொடுப்பார் என அன்புமணி தரப்பினர் மகிழ்ச்சியடைந்துள்ள நிலையில், தந்தை மகன் பிரச்சினையில் ராமதாசுடன் இருந்தவர்கள், இந்த சந்திப்பினால் கவலையுற்றிருக்கிறார்கள்.
