நீட் தேர்வையும், பொருளாதார அடிப்படையிலான 10 சதவீத (EWS ) இடஒதுக்கீட்டையும் ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் இன்று தொடங்க திட்டமிடப்பட்டிருந்த வாகனப் பிரசாரப் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.
சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் இருந்து நான்கு நாள் விழிப்புணர்வு பயணம் தொடங்க இருந்த நிலையில், அங்கு 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, நுழைவாயிலில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதையடுத்து, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, இளைஞரணி, மாணவர் கழகம் மற்றும் மகளிர் பாசறை சார்பில் நடைபெற இருந்த இருசக்கர வாகனப் பிரசாரப் பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், நீட் விலக்கு மற்றும் EWS இடஒதுக்கீடு ரத்து கோரிக்கையை வலியுறுத்தி ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் பிரசாரப் பயணம் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவித்தார். கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி மறுத்தது ஏற்க முடியாதது என்றும், நீட் எதிர்ப்பு பிரசாரப் பயணங்களை கடந்த காலங்களில் பலமுறை நடத்தியபோதும் எந்த அரசும் அனுமதி மறுக்கவில்லை என்றும் கூறினார்.
“முதலமைச்சர் தனது கொள்கைத் தலைவர் பெரியார் எனக் கூறும் நிலையில், சமூகநீதிக்கான இந்தப் பிரசாரப் பயணத்துக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது?” என்று கேள்வி எழுப்பிய அவர், காவல்துறை ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு காரணங்களை கூறுவதாக குற்றம்சாட்டினார்.
மேலும், இந்த விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நீதிமன்றத்திலும் அனுமதி கிடைக்காவிட்டால் தடையை மீறி இருசக்கர வாகனப் பேரணியை நடத்துவோம் என்றும் கலி. பூங்குன்றன் தெரிவித்தார். EWS இடஒதுக்கீடு பிற சமூக மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறிய அவர், அந்த இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
