கர்நாடக அரசு, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை முழுமையாக திறந்து விட வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்தின் உரிமை நீரை முழுமையாகப் பெற மாநில அரசு உறுதியான அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்டுதோறும் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி காவிரி நீர் வழங்கப்பட வேண்டும் என்றும், ஜூன் மாதத்தில் வழங்க வேண்டிய 9.19 டிஎம்சிக்கு பதிலாக 2.91 டிஎம்சி மட்டுமே கர்நாடகா திறந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜூலை மாதத்தில் திறக்க வேண்டிய 31.24 டிஎம்சி நீரில், இதுவரை வழங்கப்பட வேண்டிய அளவு முழுமையாக திறக்கப்படவில்லை என்றும், ஜூன் மாத நிலுவை நீரையும் கர்நாடக அரசு இன்னும் வழங்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், கர்நாடக அணைகள் நிரம்பிய பிறகே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என கர்நாடக முதல்வர் கூறியதாக வெளியாகியுள்ள தகவலை விமர்சித்துள்ள எடப்பாடி பழனிசாமி, இது உச்சநீதிமன்றத் தீர்ப்பையும், காவிரி நீர் பகிர்வு வழிகாட்டு நெறிமுறைகளையும் மீறும் செயலாகும் என தெரிவித்துள்ளார்.
வரும் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான தமிழகத்தின் முழு பங்கு நீரையும் பெற்றுத் தர, தமிழக முதல்வர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
