மக்களுடன் நேரடியாக தொடர்பில் இருந்தால் மட்டும்தான் நம் உள்ளாட்சித் தேர்தல் வெற்றி பெற முடியும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை இராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்,. திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டம் மற்றும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அரசியலில் வெற்றி தோல் என்பது சகஜம். எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோர் இருந்தபோதும் கட்சியில் வெற்றி தோல்வி ஏற்பட்டுள்ளது என்றவர், திமுக கடந்த 10 ஆண்டுகள் தோல்வியை சந்தித்து ஆட்சியை பிடிக்கவில்லையா? என கேள்வி எழுப்பினார்.
இதனை எல்லாம் ஆராயாமல் சிலர் பதவிக்காகவும் பணத்தை காப்பாற்றவும் மாற்று கட்சிக்கு சென்று விட்டதாகவும் விமர்சித்தார்.
மக்களின் பிரச்சினையை ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு சென்று நடவடிக்கை எடுப்பதற்கு முன் அதிமுகவினர் அவர்களது குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,
அதிமுக ஆட்சியில் செய்த நல்ல திட்டங்களை நீங்கள் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்திய எடப்பாடி பழனிசாமி,
மக்களுடன் நீங்கள் நேரடியாக தொடர்பு இருந்தால் மட்டுமே தான் நம் உள்ளாட்சித் தேர்தல் வெற்றி பெற முடியும். எனவே மக்களிடம் நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள் என்றார்.
மேலும் மக்களின் பிரச்சினையை தீர்க்க வழிவகை செய்யுங்கள் என வலியுறுத்தியவர், இளைஞர்களையும். மாணவர்களையும் அதிமுக பக்கம் திசை திருப்புங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.
மாணவரணி மற்றும் இளைஞர் அணியில் சேர்க்கும்போது அந்தந்த வயதிற்குட்பட்டவர்களை உறுப்பினர்களாக சேர்க்கவேண்டும் என அறிவுறுத்தியவர், கட்சியில் செயல்படாதவர்களை மாற்றியமையுங்கள், ஆர்வமுடன் இருப்பவர்களுக்கு பதவி கொடுங்கள் என்றார்.
