மிழக அரசியல் சதுரங்க ஆட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வியூகங்கள் மாறி வருகின்றன. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளித்து வரும் அதிமுகவின் அதிருப்தி அணி, இப்போது எடப்பாடி பழனிசாமியின் அரசியல் எதிர்காலத்திற்கே ‘செக்’ வைக்கும் அதிரடி ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது.

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் அலுவலகத்தில், தமிழக அரசியலின் தற்போதைய போக்கைத் தீர்மானிக்கக்கூடிய மிக முக்கியமானதொரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இந்த கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இரண்டு மிக முக்கியமான ‘ஸ்கெட்ச்கள்’ போடப்பட்டுள்ளன.

1400 கையெழுத்துகள்… எடப்பாடிக்கு சட்ட நெருக்கடி!

கூட்டத்தின் முதல் அதிரடியாக, அதிமுகவின் ஒட்டுமொத்தக் கட்டுப்பாட்டையும் எடப்பாடியிடமிருந்து பறிப்பதற்கான சட்டப்பூர்வ ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. தங்களுக்கு ஆதரவாக உள்ள மாவட்டச் செயலாளர்கள் மற்றும் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமாக, தமிழகம் முழுவதிலும் உள்ள பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களிடம் இருந்து 1400 படிவங்களில் முறைப்படி கையொப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

கட்சியின் சட்ட விதிகளின்படி, குறிப்பிட்ட சதவீத உறுப்பினர்கள் கோரினால் பொதுக்குழுவைக் கூட்டுவது கட்டாயமாகும். இந்த 1,400 படிவங்களையும் கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி, உடனடியாகப் பொதுக்குழுவைக் கூட்ட நெருக்கடி கொடுக்க வேலுமணி தரப்பு முடிவு செய்துள்ளது. பொதுக்குழுவைக் கூட்டினால் எடப்பாடியின் பதவிக்கே ஆபத்து, கூட்ட மறுத்தால் நீதிமன்ற அவமதிப்பு என எடப்பாடியைச் சுற்றிலும் சட்ட வேலி அமைத்துள்ளது சி.வி.சண்முகம் தரப்பு.

சபாநாயகர் சந்திப்பு… எடப்பாடிக்கு ’செக்’

இந்த ஆட்டத்தின் அடுத்த கட்டமாக, வேலுமணி தரப்பு தங்களின் பார்வையைத் தமிழகச் சட்டமன்றத்தை நோக்கித் திருப்பியுள்ளது. தங்களுக்கு ஆதரவாக இருக்கும் 25 சட்டமன்ற உறுப்பினர்களின்  பலத்தை வைத்து, சட்டமன்றத்தில் ஒரு புதிய சட்டமன்றக் குழுத் தலைவர் மற்றும் கொறடாவை நியமிக்க அவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

இதற்காக, மிக விரைவில் 25 எம்.எல்.ஏ-க்களின் கையொப்பமிட்ட கடிதத்துடன் சபாநாயகரை நேரில் சந்திக்க எஸ்.பி.வேலுமணி தரப்பு திட்டமிட்டுள்ளது. சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தைப் பறிப்பதும், தங்களை ஒரு தனி அங்கீகாரம் பெற்ற அணியாக அறிவிக்கக் கோருவதுமே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாக இருக்கும் எனத் டெரிகிம். இது நடந்தால், சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியின் பலம் வெறும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்குக் சுருங்கிவிடும்.

இரட்டை வியூகம்

தற்போதைய தவெக அமைச்சரவையில் வேலுமணி தரப்பு இணைவதற்கு, வெளியில் இருந்து தவெக-வை ஆதரிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.  ஆனாலும், முதலமைச்சர் விஜய்யின் ஆட்சி நீடிக்கத் தங்கள் தரப்பு  எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு எவ்வளவு முக்கியம் என்பதை அவர்கள் அறிவார்கள். அதனால்தான், சபாநாயகர் மூலம் தங்களைத் தனி அணியாக அங்கீகரித்துக் கொண்டால், தவெக அரசு தங்களை எக்காலத்திலும் கைவிட முடியாது என்றும், அதே நேரத்தில் எடப்பாடியை முழுமையாகத் தனிமைப்படுத்தலாம் என்றும் இரட்டை வியூகம் வகுத்துள்ளதாக தெரிகிறது.

அதிமுக வரலாற்றில் எடப்பாடி பழனிசாமிக்கு இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு மிகப்பெரிய உட்கட்சிச் சவால் உருவாகியுள்ளது. 1,400 பொதுக்குழு உறுப்பினர்களின் கையெழுத்துகள் மற்றும் சபாநாயகரைச் சந்திக்கத் தயாராகும் 25 எம்.எல்.ஏ-க்களின் படைவகுப்பு என எடப்பாடிக்கு வைக்கப்பட்ட ‘செக்’ மிக வலுவானதாக உள்ளது. சபாநாயகரின் கைகளில் இருக்கும் அந்த ஒரு கடிதம், தமிழக அரசியலிலும், அதிமுகவின் எதிர்காலத்திலும் மிகப்பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தப் போவது உறுதி!

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version