சென்னை அண்ணா சாலையில் உள்ள 25 டயர் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை அண்ணாசலை பார்டர் தோட்டம், ஜிபி லேன் பகுதியில், வாகனங்களுக்கு பயன்படுத்தும் டயர்களை விற்பனை செய்யும் 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது.
இன்று காலை கைலாஷ் என்பவருக்கு சொந்தமான டயர் கடையில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் தீ அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவி விண்ணை முட்டும் அளவிற்கு பற்றி எரியத் தொடங்கியது.
இதனால் அந்த பகுதி முழுதும் கரும்புகை சூழ்ந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.. தகவலின் பேரில் எழும்பூர், வேப்பேரி, கீழ்பாக்கம், திருவல்லிக்கேணி, அசோக் நகர், கோயம்பேடு, எஸ்பிளனேடு, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனத்தில் வந்த 30 மேற்பட்ட வீரர்கள் சுமார் 5 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீவிபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. மாறாக இந்த தீவிபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.. இந்த தீவிபத்து குறித்து அண்ணாசாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
