தமிழ்நாடு போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது.
போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், தலைமைச்செயலாளர் சாய்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், போக்குவரத்து துறை சார்ந்த செயல்பாடுகள், செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. போக்குவரத்து துறையின் கீழ் இயங்கும் 8 அரசு போக்குவரத்து கழகங்கள், சாலை போக்குவரத்து நிறுவனம், தமிழ்நாடு பயணியர், சரக்கு போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு இயக்குநரகத்தின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சரிடம் அதிகாரிகள் விளக்கியதாக கூறப்படுகிறது. கூட்டத்தில் போக்குவரத்து துறைக்கு ஓராண்டு, மூன்றாண்டு மற்றும் ஐந்தாண்டு என செயல்திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.
மாநிலம் முழுவதும் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்வது தொடர்பான செயல் திட்டம் குறித்தும், மின்சாரப் பேருந்துகளை பெருமளவு பயன்பாட்டிற்கு கொண்டு வருவது பற்றியும், போக்குவரத்து தொழிலாளர்களின் நலன் மற்றும் அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது பற்றியும் முதல்வர் ஆலோசனை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. பயணிகள் பணமில்லா பரிவர்த்தனை மூலம் பேருந்தில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு முறையை அமல்படுத்துவது குறித்தும், பேருந்து போக்குவரத்துக்கு தனி வழித்தடம் திட்டம் குறித்தும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
