அதிமுகவைத் தீர்ந்துபோன சக்தி என விமர்சிக்கும் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யை, “நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்” எனவும், “முதலில் விஜய் வாயைத் திறந்து பேச வேண்டும்” எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கடுமையாக விமர்சித்தார்.

சென்னை மதுரவாயலை அடுத்த நெற்குன்றம் பகுதியில் பள்ளி, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அரசு மதுபானக் கடையை மூட வலியுறுத்தி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

145-ஆவது வார்டு அதிமுக கவுன்சிலர் சத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய கோகுல இந்திரா, “மதுபானக் கடையை மூட வேண்டியது எம்.எல்.ஏ-வின் பணிதான். ஆனால் அதைச் செய்யாமல், மதுரவாயல் எம்.எல்.ஏ சிறுபிள்ளைத்தனமாகச் செயல்படுகிறார். மக்கள் போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில், ‘ஜனநாயகம்’ படத்தைப் பார்க்க வைப்பதற்காக அமைச்சர்களுக்கும் பிரபலங்களுக்கும் ரோகிணி திரையரங்கில் இடம் ஒதுக்கீடு செய்வதில் மட்டுமே மதுரவாயல் எம்.எல்.ஏ கவனம் செலுத்துகிறார்” எனக் குற்றம்சாட்டினார்.

மேலும், “அதிமுகவைத் தீர்ந்துபோன சக்தி எனக் கூறும் விஜய், முதலில் வாயைத் திறந்து பேச வேண்டும். நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் எல்லாம் அதிமுகவை விமர்சிக்கக் கூடாது” என்றும் கடுமையாகத் தன் கண்டனத்தைப் பதிவுசெய்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version