விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றதை எதிர்த்து தே.மு.தி.க. வேட்பாளர் விஜயபிரபாகரன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

2024ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில்,  விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட  மாணிக்கம் தாகூர்,  அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனை விட 4 ஆயிரத்து 379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதனையடுத்து மாணிக்கம் தாகூரின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி, தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், சென்னை உயர் நீதிமன்ற தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், மாணிக்கம் தாகூர் தேர்தல் வேட்புமனுக்களில் உண்மை தகவல்களை மறைத்ததாகவும், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், விஜய பிரபாகரன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கில் கூறப்பட்டிருந்த சில குற்றச்சாட்டுகளை நீக்கக் கோரியும், தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரியும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நீக்கக் கோரியும், தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரியும் மாணிக்கம் தாகூர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என மாணிக்கம் தாகூர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 9 ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version