கேரள மாநிலம் கழக்கூட்டம் தொகுதியின் புதிய பாஜக எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் முரளிதரன், பள்ளித் திறப்பு விழாவின் போது பழங்குடியின மாணவர்களின் மேஜை மீது மிட்டாய்களை வீசிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் ஒழிக்கப்பட்ட சாதியப் பாகுபாட்டுச் சடங்குகளை இந்தச் செயல் நினைவூட்டுவதாகப் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
திருவனந்தபுரம் மாவட்டம் கட்டேலாவில் உள்ள அரசு டாக்டர் அம்பேத்கர் நினைவு மாதிரி குடியிருப்புப் பள்ளியில் கடந்த ஜூன் 1 அன்று பள்ளித் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கழக்கூட்டம் தொகுதி எம்.எல்.ஏ வி.முரளிதரன் மற்றும் எஸ்சி/எஸ்டி (SC/ST) நலத்துறை அமைச்சர் கே.ஏ.துளசி ஆகியோர் கலந்துகொண்டு விழாவைத் தொடங்கி வைத்தனர்.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், பாஜக எம்.எல்.ஏ வி.முரளிதரன் மாணவர்களின் கைகளில் நேரடியாக மிட்டாய்களைக் கொடுக்காமல், அவர்களின் மேஜைகளில் மிட்டாய்க் கொத்துக்களை வீசிச் செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், மிட்டாய் விநியோகம் முடியும் வரை மாணவர்கள் யாரும் அதைத் தொடக் கூடாது என அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, வி.முரளிதரனின் இந்தச் செயலுக்குக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகத்தினரைத் தொட்டுப் பழக மறுத்த சாதியப் பாகுபாட்டின் எச்சமே இது என்று பலரும் சாடியுள்ளனர். மேலும், இந்த நிகழ்வின் போது உடன் இருந்த அமைச்சர் கே.ஏ.துளசி ஏன் இதைத் தடுத்து நிறுத்தவில்லை என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து கேரள முன்னாள் கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி விடுத்துள்ள அறிக்கையில், “பாஜக எம்.எல்.ஏ-வின் இந்த நடத்தை கேரளாவின் சமூகக் கலாச்சாரத்திற்கு எதிரானது. அவர் மாணவர்களிடம் நேரடியாக அன்போடு மிட்டாய்களை வழங்கியிருக்க வேண்டும். பழங்குடியினக் குழந்தைகளை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்ட முரளீதரன், இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். குழந்தைகளிடம் மரியாதையுடன் பழக விருப்பமில்லை என்றால் அவர் இந்த விழாவைப் புறக்கணித்திருக்கலாம். இது அவரது ‘சவர்ணா’ (மேல்சாதி) மனநிலையைக் காட்டுகிறது” என்று சாடியுள்ளார்.
தலித் உரிமை ஆர்வலரான தினு வெயில் கூறுகையில், “இந்திய வரலாற்றில் ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் மனித கண்ணியத்தைப் பறிப்பதற்கும், அவர்களின் சாதியை அவர்களுக்கு நினைவூட்டுவதற்கும் உணவு பரிமாறப்படும் விதமே ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால்தான் உணவு விநியோகிக்கப்படும் முறை என்பது இங்கே அரசியல் ரீதியானது” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ள வி.முரளிதரன் எம்.எல்.ஏ, “குழந்தைகளுக்காக வாங்கப்பட்ட மிட்டாய்களை விரைவாக விநியோகிக்க வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே, மேஜை வாரியாக மொத்தமாகச் சேர்த்து வைத்தேன். இந்தச் சிறிய விஷயத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுமென்றே சாதிச் சாயம் பூச முயல்கிறது” என்று தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற 2026 கேரள சட்டப்பேரவைத் தேர்தலில், கழக்கூட்டம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் மத்திய இணையமைச்சர் வி.முரளிதரன், சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர் கடகம்பள்ளி சுரேந்திரனை 428 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல்முறையாக எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
