கடந்த ஒரு மாதத்தில் இந்தியா தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு முக்கிய சாதனைகளைப் பதிவு செய்துள்ளதாகப் பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்ப்பில் பெருமிதம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 20) தொடங்கி, ஆகஸ்ட் 13 வரை நடைபெறுகிறது. மொத்தம் 25 நாட்களில் 19 அமர்வுகள் நடைபெற உள்ளன. பல முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பல்வேறு விவகாரங்களில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தொடரில், திரிணாமுல் காங்கிரஸிலிருந்து பிரிந்து வந்த 20 எம்.பி.க்கள் இணைந்து உருவாக்கிய தேசிய குடிமக்கள் கட்சி (NCPI) முதன்முறையாக நாடாளுமன்றத்தில் பங்கேற்கிறது. அந்தக் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இணைந்துள்ளது.
கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் பிரதமர் நரேந்திர மோடி ஊடகங்களைச் சந்தித்து உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், , கடந்த ஒரு மாதத்தில் இந்தியா தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு முக்கிய சாதனைகளைப் பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், “கடந்த ஒரு மாதத்தில் நாடு பல முக்கியமான சாதனைகளைப் பெற்றுள்ளது. தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் இந்தியர்கள் பெருமைப்படக்கூடிய பல நிகழ்வுகள் நடந்துள்ளன. விண்வெளித் துறையிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பு ஒரு இந்தியர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு இந்திய இளைஞர்கள் வழிநடத்தும் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம், உலகில் சில நாடுகள் மட்டுமே சாதித்துள்ள ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது,” என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “மழையாக இருந்தாலும், மழைக்கால கூட்டத்தொடராக இருந்தாலும், இரண்டும் சுறுசுறுப்பாகவும் பயனுள்ளதாகவும் இருந்தால், அது நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் நலனுக்கும் பெரும் பலன் அளிக்கும். எனவே, மழையும் சிறப்பாக பொழிய வேண்டும்; மழைக்கால கூட்டத்தொடரும் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்று நாம் அனைவரும் பிரார்த்திப்போம்,” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்த கூட்டத்தொடரில் மத்திய அரசு பின்வரும் முக்கிய மசோதாக்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது:
உச்சநீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா, 2026
வெளிநாட்டு நன்கொடை (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026
விக்சித் பாரத் கல்வி அதிஷ்டான் மசோதா, 2025
