உலகப் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு நெய் வினியோகம் செய்யும் பணியில் பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளது. கேரள அரசின் பால்வள மேம்பாட்டு நிறுவனமான மில்மா மூலம் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்ட நெய்யில் பெரும் அளவு கலப்படம் செய்யப்பட்டு, தரம் குறைந்த நெய் சபரிமலைக்கு அனுப்பப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோசடியால் சுமார் ரூ.85.73 லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தனியார் நிறுவனங்கள் மூலம் சபரிமலைக்கு நெய் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், தரம் குறைந்த மற்றும் கலப்படம் செய்யப்பட்ட நெய் வழங்கப்படுவதாக பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து தொடர் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து கேரள அரசு, நம்பகமான அரசு நிறுவனமான மில்மாவிடம் (MILMA) நெய் வாங்க முடிவு செய்தது. அதன்படி, கடந்த சீசனில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மில்மாவின் உற்பத்தி மையத்தில் இருந்து 1,77,666 லிட்டர் நெய் சபரிமலைக்கு அனுப்பப்பட்டது. ஆனால், மீண்டும் தரம் குறைந்த நெய் வினியோகம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததால், பால்வள மேம்பாட்டு கழக இயக்குநர் சாலினி கோபிநாத் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகின. மில்மா உற்பத்தி செய்த உயர்தர நெய்யைப் பயன்படுத்தாமல், வழியில் மற்ற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தரம் குறைந்த, கலப்படம் நிறைந்த நெய்யை மில்மா டின்களில் அடைத்து சபரிமலைக்கு அனுப்பியுள்ளனர். உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இந்த நெய்களை சோதனை செய்யாமல் அனுமதித்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த முறைகேட்டில் மூத்த அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இந்த மோசடி மூலம் ரூ.85.73 லட்சம் அளவுக்கு நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை போன்ற புனித தலத்துக்கு அளிக்கப்படும் பிரசாதப் பொருட்களில் இத்தகைய மோசடி நடைபெற்றிருப்பது பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விசாரணை முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் மில்மா போன்ற அரசு நிறுவனங்களின் நம்பகத்தன்மையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
