தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக பணியாற்றி வரும் ராஜேந்திர அர்லேக்கர், நாளை காலை திடீர் பயணமாக டெல்லி செல்ல உள்ளார். தமிழ்நாட்டிற்கு நீண்ட நாட்களாக ஒரு முழுநேர ஆளுநரை நியமிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில், பொறுப்பு ஆளுநரின் இந்த டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி செல்லும் ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார். இந்தச் சந்திப்பின்போது தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் புதிய ஆளுநர் நியமனம் தொடர்பான முக்கிய ஆலோசனைகள் இடம்பெறலாம் எனக் கூறப்படுகிறது.
தன்னுடைய டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு, நாளை இரவே அவர் மீண்டும் சென்னை திரும்ப உள்ளார். இந்தத் திடீர் பயணம், தமிழக ஆளுநர் விவகாரத்தில் ஏதேனும் ஒரு முக்கிய முடிவை மத்திய அரசு எடுக்கப்போகிறதா என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
