போதைக் கும்பலால் செய்தியாளர் தாக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் நடப்பது தவெக ஆட்சியா? திமுக ஆட்சியா என செந்தமிழன் சீமான் சீற்றம் காட்டியுள்ளார்.
சீமான் வெளியிட்டுள்ள பதிவில், திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையைச் சேர்ந்த செய்தியாளரும், நாம் தமிழர் கட்சியின் மாவட்டத் தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளருமான அன்புத்தம்பி ஹாஜா முகைதீன் தனது வீட்டின் வாசலிலேயே போதைக் கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். தம்பிக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, முழு உடல்நலம் பெற்று மீண்டுவர துணைநிற்கிறேன் எனத் தெரிவித்துள்ளர்.
போதைப்பொருட்களின் விற்பனைக்கு எதிராக நிற்கும் ஒரு ஊடகவியலாளருக்கே இவ்வளவு பெரிய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, வன்முறைத்தாக்குதல் தொடுக்கப்படுகிறதென்றால், எளிய மக்களின் நிலை என்னவாக இருக்கும்?
நாள்தோறும் போதைக்கும்பலின் அட்டூழியமும், பெண்களுக்கு எதிரான தாக்குதல்களும், வன்முறை வெறியாட்டங்களும் தொடர்ந்தவண்ணம் உள்ளன.
திமுகவின் ஆட்சியில் நிகழ்ந்த கொடுமைகள்தான் தொடருமென்றால், நடப்பது தவெகவின் ஆட்சியா? இல்லை! திமுகவின் ஆட்சியா? இதுதான் மாற்று அரசியலா? முதல்வராகப் பதவியேற்றதும், ‘போதைப்பொருள் தடுப்புக்கான சிறப்பு அதிரடிப்படை அமைப்பு’ எனக் கையெழுத்திட்டாரே விஜய், என்ன செய்கிறது அந்தப் படை? என முதலமைச்சருக்கு கேள்வி எழுப்பியுள்ள சீமான்,
இக்கொடூரத் தாக்குதல் நடத்தியவர்களை தமிழ்நாடு அரசு உடனடியாக கைது செய்து, கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
