சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் 1845ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் தேதி பிறந்தவர் அயோத்திதாச பண்டிதர். காத்தவராயன் என்னும் இயற்பெயர் கொண்ட இவர், தனது ஆசிரியர்கள் மேல் கொண்ட பற்றின் காரணமாக தனது பெயரை அயோத்திதாச பண்டிதர் என மாற்றிக் கொண்டார். தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளியான அயோத்திதாசர் சமூக சீர்திருத்தவாதி மட்டுமன்றி சித்த மருத்துவரும் ஆவார்.
1891 ஆண்டு திராவிட மகாஜன சபையைத் தோற்றுவித்து, தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் உரிமைகளுக்காகப் போராடிய அயோத்தி தாசர், திராவிடர் கழகம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற இயக்கங்கள் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் முதன்மையானவர் ஆவார்.
‘சாக்கிய பௌத்த சங்கம்’ எனும் அமைப்பை உருவாக்கி, நவீன பௌத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்டதோடு, 1907ஆம் ஆண்டு ‘தமிழன்’ என்ற வார இதழைத் தொடங்கி, அதன் மூலம் மக்களிடையே பகுத்தறிவு, சமத்துவம் மற்றும் சுயமரியாதை சிந்தனைகளை விதைத்தவர் ஆவார்.
அயோத்தி தாச பண்டிதரின் 181வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு அரசு தரப்பில் அவருக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.
காந்தி மண்டபம் வளாகத்தில் அமைந்துள்ள அயோத்திதாச பண்டிதரின் மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள முழு உருவச் சிலைக்கு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அயோத்திதாச பண்டிதரின் சிலைக்கு முன்பாக உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.
