மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் புத்தெழுச்சி நாள் விழா அகவை 103 என்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் இன்று (ஜூன் 3) சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஐந்து முறை தமிழக முதலமைச்சராகப் பணியாற்றிய கலைஞர், சமூக நீதி, தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் தமிழகத்தின் கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ஆற்றிய பங்களிப்புகள் ஈடுஇணையற்றவை.

இந்தநிலையில், கலைஞரின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் புத்தெழுச்சி நாள் விழா அகவை 103 என்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

மேலும், தமிழக முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில், “தம்பி கருணாநிதியின் உழைப்பு இரவும் பகலும் அறியாதது” என்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வாசகம் எழுதப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் காலை முதலே அரசியல் தலைவர்கள், அரசுப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் மற்றும் அவரது பற்றாளர்கள் அன்னதானம் வழங்குதல், நலத்திட்ட உதவிகள் செய்தல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம் இந்த நாளைக் கொண்டாடி வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version