கரூர் அருகே கஞ்சா வழக்கு தொடர்பாகக் காவல் நிலையத்தில் விசாரணையில் இருந்த இளைஞர் ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் வேலாயுதம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், கஞ்சா விற்பனையில் தொடர்புடையதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவரை வேலாயுதம்பாளையம் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணை நடந்துகொண்டிருந்தபோதே, அந்த இளைஞர் திடீரென பேச்சு, மூச்சு இல்லாமல் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் மற்றும் அங்கு வந்திருந்த அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். பிறகு, இளைஞருக்குத் வலிப்பு ஏற்பட்டதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரைத் கைகளில் தூக்கிக்கொண்டு ஓடி வந்து, வாசலில் நின்ற ஆம்புலன்ஸில் ஏற்றினர். பின்னர் அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள காவல் துறை, விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட இளைஞருக்குக் கஞ்சா மற்றும் மதுப் பழக்கம் இருந்துள்ளது. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டபோது எதிர்பாராதவிதமாக அவருக்கு வலிப்பு ஏற்பட்டதால், உடனடியாக முதலுதவி வழங்கி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக தெரிவித்தனர்.
இதனிடையே காவல் நிலையத்தில் இருந்து அந்த இளைஞரைப் பேச்சு, மூச்சற்ற நிலையில் அவரது உறவினர்கள் பதற்றத்துடன் தூக்கிக் கொண்டு ஆம்புலன்ஸிற்கு ஓடும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
