சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 11-ஆம் கட்ட அகழாய்வில், இதுவரை கண்டறியப்படாத வகையில் கைப்பிடியுடன் கூடிய செந்நிற சுடுமண் பானை முதன்முறையாக கண்டெடுக்கப்பட்டுள்ளது தொல்லியல் ஆய்வாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் 11-ஆம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த மார்ச் 18-ஆம் தேதி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. கீழடி கிராமத்தில் கஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில் இந்த அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை ஏழு அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில், செங்கல் கட்டுமானங்கள், கழிவுநீர் வடிகால் அமைப்புகள், சுடுமண் சாயக் கிண்ணங்கள், தக்கழிகள், பாசி மணிகள் மற்றும் பல்வேறு வகையான பானை ஓடுகள் உள்ளிட்ட ஏராளமான தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கீழடி பகுதி நகரமயமான குடியிருப்பாக விளங்கியதற்கான ஆதாரங்களாகக் கருதப்படுகின்றன.
கீழடியில் முந்தைய 10 கட்ட அகழாய்வுகளின் போது கெண்டி மூக்கு பானைகள், மூடியுடன் கூடிய பானைகள், அடர் சிவப்பு நிற சுடுமண் பாத்திரங்கள், வர்ணம் தீட்டப்பட்ட பானைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான மட்பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. ஆனால், தற்போதைய 11-ஆம் கட்ட அகழாய்வில் முதன்முறையாக இருபுறமும் கைப்பிடி பொருத்தப்பட்ட செந்நிற சுடுமண் பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள இந்த பானையின் மேற்பகுதியில் சிறிய வட்டவடிவ திறப்பு காணப்படுகிறது. இதன் மூலம் தண்ணீர் அல்லது பிற திரவப் பொருட்களை சேமித்து பயன்படுத்தியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும், பானையின் நடுப்பகுதியில் அலங்கார வடிவிலான மூன்று வடிவமைப்புகள் இடம்பெற்றுள்ளன. பானையை எளிதாக எடுத்துச் செல்லும் வகையில் இருபுறங்களிலும் உருண்டை வடிவ கைப்பிடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு கைப்பிடி பகுதி சேதமடைந்திருந்தாலும், மற்றொரு பகுதி முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளது.
இந்த பானை கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகில் செங்கல் கட்டுமானங்களும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. மேலும் பல குழிகள் தோண்டப்பட உள்ளதால், அடுத்தடுத்த நாட்களில் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருட்கள் கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கீழடியில் இதுவரை நடைபெற்ற 11 கட்ட அகழாய்வுகளில் முதன்முறையாக கைப்பிடியுடன் கூடிய சுடுமண் பானை கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, சங்ககாலத் தமிழர்களின் கைவினைத் திறன் மற்றும் பயன்பாட்டு தொழில்நுட்பம் குறித்த ஆய்வுகளுக்கு புதிய பரிமாணத்தை வழங்கும் என தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
