சண்டிகரின் முல்லன்பூரில் நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணியின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆப்கானிஸ்தான் அணி 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணியின் அறிமுக சுழற்பந்து வீச்சாளரான 23 வயது மானவ் சுதர், தனது அறிமுக போட்டியிலேயே அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை (22 ஓவர்களில் 33 ரன்கள் மட்டும் கொடுத்து) வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் அறிமுக போட்டியில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய 10-வது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
மற்றொருபுறம் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரஹ்மத் ஷா 60 ரன்கள் எடுத்தார்.
இந்தியா 412 ரன்கள் முன்னிலை: முன்னதாக, தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி, கேப்டன் சுப்மன் கில் (126) மற்றும் கேஎல் ராகுல் (100) ஆகியோரின் சதங்களாலும், சாய் சுதர்சன் (81), ரிஷப் பண்ட் (81), வாஷிங்டன் சுந்தர் (52*) ஆகியோரின் அதிரடி அரைசதங்களாலும் 564/8 ரன்கள் குவித்திருந்த போது டிக்ளேர் செய்தது.
இதன் மூலம் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 412 ரன்கள் பிரம்மாண்ட முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு ‘பாலோ-ஆன்’ (Follow-on) வழங்கியதை அடுத்து, அந்த அணி தனது 2-வது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடி வருகிறது.
