கேரளாவில் ஆகஸ்ட் மாதக் கனமழை மீண்டும் அச்சத்தைத் தூண்டியுள்ளது. மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடியில் 2020 ஆகஸ்ட் 6 அன்று நிகழ்ந்த கொடூர நிலச்சரிவில் 70 பேர் உயிரிழந்த துயர நினைவு இன்றுடன் ஆறு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் அந்த இரவில் மண்ணுக்குள் புதைந்த சோகம் மக்கள் மனதில் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது.
தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கும். ஜூலையில் தீவிரமாக இருக்கும் மழை, கடந்த சில ஆண்டுகளாக ஆகஸ்டில் அதிகரித்து உயிரிழப்புகளையும் பேரிடர்களையும் ஏற்படுத்தி வருகிறது. 2018 ஆகஸ்டில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு சுமார் 480 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. சாலைகள், பாலங்கள், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. இடுக்கி உள்ளிட்ட மலைப்பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்த ஆண்டும் ஜூலை இறுதியில் இருந்து மழை தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் நீர்நிலை விபத்துகளால் 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இடுக்கி மாவட்டத்தில் மட்டும் இருவர் உயிரிழந்துள்ளனர். பத்தனம்திட்டா, கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக மழை பதிவாகியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
மலைப்பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. பேரிடர் மேலாண்மை குழுக்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளன. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், அபாயப் பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். ஆகஸ்ட் மழை மீண்டும் நினைவூட்டும் இந்த துயரங்கள், தயார்நிலையை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதை உணர்த்துகின்றன.
