‘மதயானைக் கூட்டம்’ மற்றும் ‘இராவணக் கோட்டம்’ போன்ற முக்கிய படங்களை இயக்கிய திரைப்பட இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் நேற்றிரவு காலமானார்.
பரமக்குடியைச் சேர்ந்த விக்ரம் சுகுமாரன், சினிமாவில் நடிப்புக்காக சென்னைக்கு வந்தவர். தனது பயணத்தின் ஆரம்பத்தில், தமிழின் முன்னணி இயக்குநரான பாலு மகேந்திராவிடம் 1999 முதல் 2000 வரை உதவியாளராக பணியாற்றினார்.
பின்னர், வெற்றிமாறன் இயக்கிய ‘பொல்லாதவன்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். சசிகுமார் நடித்த ‘கொடிவீரன்’ படத்திலும் அவர் நடித்துள்ளார். வெற்றிமாறனுடன் இணைந்து ‘ஆடுகளம்’ படத்திற்கு வசனம் எழுதியதும் குறிப்பிடத்தக்கது.
2013-ம் ஆண்டு கதிர் மற்றும் ஓவியா நடித்த ‘மதயானைக் கூட்டம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்தார் விக்ரம் சுகுமாரன். இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. பிறகு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அவர் இயக்கிய இரண்டாவது படம் ‘இராவணக் கோட்டம்’. இதில் சாந்தனு ஹீரோவாக நடித்தார். தற்போது, ஏறுதழுவலை மையமாகக் கொண்டு ‘தேரும் போரும்’ என்ற புதிய படத்தை இயக்கி வந்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். இந்த துயரச்செய்தியை நடிகர் சாந்தனு தனது எக்ஸ் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் தனது இரங்கலில், “அமைதியாக உறங்குங்கள் சகோதரா. உங்களிடம் இருந்து நான் பலமான விஷயங்களை கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு தருணத்தையும் நான் என்றும் நினைவில் வைத்திருப்பேன். நீங்கள் மிக விரைவாக விலகிவிட்டீர்கள்” என பதிவிட்டுள்ளார்.
விக்ரம் சுகுமாரனின் திடீர் மரண செய்தி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.