மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த சட்ட கல்லூரி மாணவர் கதிர், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,
மதுரை காந்தி அருங்காட்சியகம், பல ஆண்டுகளாக கல்வி, ஆய்வு, பொதுமக்கள் விழிப்புணர்வு மற்றும் வரலாற்றுப் பாரம்பரிய பாதுகாப்பிற்கான முக்கிய மையமாக விளங்கி வருகிறது.
இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைப்புப் பணிகள் காரணமாக காந்தி நினைவு அருங்காட்சியகமும் அதன் நூலகமும் மூடப்பட்டிருக்கிறது. அருங்காட்சியகத்தை மீண்டும் திறப்பதாக அதிகாரிகள் பலமுறை உறுதியளித்த போதிலும், இதுவரை பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படாமல் இருப்பதுடன், திறப்பு தேதி குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இவை திறக்கப்படாமல் இருப்பதால் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், போட்டித் தேர்வர்களும், சுற்றுலாப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றை எடுத்துரைக்கும் முக்கிய பாரம்பரிய மையம் நீண்ட காலமாக செயல்படாமல் இருப்பது அதன் நோக்கத்தையே பாதிக்கிறது.
எனவே, சீரமைப்புப் பணிகளை விரைந்து நிறைவு செய்து, மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தையும் நூலகத்தையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க அரசுத் தரப்புக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, பூர்ணிமா அமர்வில் விசாரணைக்கு வந்தது
அப்போது, ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் திறக்க வாய்ப்புள்ளதா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கு குறித்து கலை மற்று பண்பாட்டு துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
