தமிழகத்தின் மாம்பழ உற்பத்தியில் திண்டுக்கல் மாவட்டம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக, நத்தம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சாணார்பட்டி, கோபால்பட்டி, வத்திபட்டி, பரலி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் மாம்பழ சாகுபடி நடைபெறுகிறது. அல்போன்சா, பங்கனப்பள்ளி, மல்கோவா எனப் பல ரகங்கள் இங்கிருந்து வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.
இந்த ஆண்டு வழக்கத்தை விட விளைச்சல் அமோகமாக இருந்தும், விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் போர் சூழல் காரணமாக, வெளிநாடுகளுக்கு மாம்பழங்களை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மாம்பழங்களுக்கான தேவை வெகுவாகக் குறைந்து, சந்தையில் கடுமையான விலை சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் கிலோ 10 முதல் 20 ரூபாய் வரை விற்பனையான மாம்பழங்கள், இந்த வாரம் படிப்படியாகக் குறைந்து, இன்று ஒரு கிலோ வெறும் 3 ரூபாய் முதல் 3 ரூபாய் 50 காசுகள் என்ற மிகக் குறைந்த விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. போக்குவரத்து மற்றும் கூலிச் செலவுகளைக் கூட ஈடுகட்ட முடியாததால், மிகுந்த வேதனையடைந்த விவசாயிகள், அறுவடை செய்த மாம்பழங்களை டிராக்டர்களில் ஏற்றிச் சென்று குப்பைகளில் கொட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஒரு கிலோ மாம்பழத்தை வளர்க்க ஆகும் செலவு கூட கிடைக்கவில்லை” எனக் குமுறுகிறார்கள் விவசாயிகள். இந்நிலை நீடித்தால் வரும் காலங்களில் மா சாகுபடியைக் கைவிடும் சூழல் ஏற்படும் என்றும், எனவே மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு மாம்பழங்களுக்கு லாபகரமான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
