மேகதாது அணை விவகாரத்தில் தொடர் சட்ட நடவடிக்கைகளை விரைவாக எடுத்திட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பாகக் கர்நாடக அரசு பூமிபூஜை நடத்தத் திட்டமிட்டுள்ள சூழலில், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும், விவசாயிகளின் நலனைக் காக்கவும் தேவையான சட்ட நடவடிக்கைகளை விரைந்து எடுக்க முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், காவிரி ஆற்றின் குறுக்கே திட்டமிடப்பட்டுள்ள மேகதாது அணையானது உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரானது என்பதால், இத்திட்டத்தை எதிர்த்து 30.11.2018 மற்றும் 07.06.2022 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசால் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 13.11.2025 அன்று இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம், மேகதாது அணை திட்டத்திற்கு எவ்வித அனுமதியையும் அளிக்கவில்லை என்றும், இத்திட்டம் தொடக்க நிலையில் தான் உள்ளது என்றும் தெரிவித்தது. மேலும், இத்திட்டம் உச்சநீதிமன்ற முந்தைய தீர்ப்பிற்கு உட்பட்டதா இல்லையா என்பதை நிபுணர்கள் அடங்கிய மத்திய நீர்வளக் குழுமம்தான் தீர்மானிக்க முடியும் என்று கூறி வழக்குகளை முடித்து வைத்தது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு அரசால் கடந்த 11.12.2025 அன்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அச்சீராய்வு மனுவானது முந்தைய ஆட்சிக்காலத்தில் உச்சநீதிமன்றத்தில் உள்விசாரணை நடைபெற்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், கர்நாடக அரசின் இந்த அணை கட்டும் பூமிபூஜை முயற்சி குறித்து, காவிரி நதிநீர் வல்லுநர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்தத் தீர்ப்பு விவரங்களைக் கருத்தில் கொண்டு, விரிவான சட்ட ஆலோசனைக்குப் பின் உடனடியாக எடுக்க வேண்டிய தொடர் சட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், தலைமைச் செயலாளர் சாய்குமார், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், நீர்வளத் துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரத சாகு உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
