சென்னை அடையாறு காந்தி நகர் பகுதியில் கயல்விழிக்குச் சொந்தமான கட்டிடத்தில் எஸ்பிஐ வங்கி வாடகைக்கு செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக அந்த கட்டிடத்தின் லிஃப்ட் பழுதடைந்து செயல்படாததால், வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் சிரமம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து முதலில் கயல்விழியின் உதவியாளரிடம் வங்கி மேலாளர் ஹர்ஷீன்சிங் புகார் தெரிவித்ததாகவும், பின்னர் நேரடியாக கயல்விழியிடமும் பழுதை சரிசெய்ய வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, கடந்த 20-ஆம் தேதி கயல்விழி நேரடியாக வங்கி கிளைக்கு சென்று மேலாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில், அவர் வங்கி மேலாளர் ஹர்ஷீன்சிங்கின் கன்னத்தில் அறைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இதையடுத்து, வங்கி மேலாளர் கடந்த 24-ஆம் தேதி சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போலீசார் கயல்விழி மீது அத்துமீறி நுழைதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
கைதாகி விடுதலை
பின்னர், விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், இன்று மதியம் கயல்விழி சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் காவல் துறையினர் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவரை போலீசார் கைது செய்து, பின்னர் காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.

