திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராதா நகர், பட்டத்தரசி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நடராஜ். அவரது மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு நந்திதா (10) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், வெண்ணிலா குழந்தைகளை விட்டுவிட்டு வேறொருவரை திருமணம் செய்து சென்றதாக கூறப்படுகிறது. அதேபோல், தந்தையான நடராஜும் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து தனியாக வசித்து வந்ததாக தெரிகிறது. இதனால், இரு குழந்தைகளையும் நடராஜின் தாயார் பொன்னம்மாள் என்ற மூதாட்டி கூலி வேலை செய்து வளர்த்து வந்தார்.
நந்திதா, திருப்பூர் மன்னரை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தார். பெற்றோர் தங்களை கவனிக்க வராத ஏக்கம் ஒருபுறமும், வயதான பாட்டி கடும் வறுமையில் உழைத்து தங்களை வளர்ப்பதை பார்த்த வேதனை மறுபுறமும் சிறுமியை கடந்த சில நாட்களாக மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தன்று பள்ளி முடிந்து வீடு திரும்பிய நந்திதா, வீட்டருகே மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் சிறுமியை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மேலும் மனமுடைந்த நந்திதா வீட்டிற்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
மாலை வேலை முடிந்து வீடு திரும்பிய பாட்டி பொன்னம்மாள், பேத்தி தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு கதறி அழுதார். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் திரண்ட உறவினர்கள், சிறுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை திட்டியதாக கூறப்படும் பெண்ணிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். உரிய விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த துயர சம்பவம், அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
